இலங்கை கடற்பரப்பில் இருந்து வெளியேறியது சீனக்கப்பல்
இலங்கை கடற்பரப்பில் இருந்து சீனாவில் இருந்து தரமற்ற உரத்தை ஏற்றிவந்த சரக்குக் கப்பல் வெளியேறியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அவர் இதனை மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு இன்று (08) அறிவித்தார்.
சேதன உரத்தை இறக்குமதி செய்வதற்கு எதிரான ரிட் மனு, மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் ஊடாக அமைச்சர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.
சீன நிறுவனமான குவிங்டோ பயோடெக் குறூப் ஒஃப் கம்பெனி லிமிட்டெட்டின் உரத் தொகுதியை ஏற்றி வந்த ஹிப்போ ஸ்பிரிட் கப்பல் இலங்கை கடற்பரப்பில் இருந்து வெளியேறிச் செல்வதாக இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாக, அமைச்சர் அளுத்கமகே சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி நிர்மலன் விக்னேஸ்வரன், மன்றில் தெரிவித்தார்.
சேதன உரங்களை நாட்டுக்கு இறக்குமதி செய்ய விவசாய அமைச்சர் எடுத்த முடிவை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி சுற்றுச்சூழலுக்கான நீதி மையம் இந்த ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சோபித ராஜகருணா மற்றும் நீதியரசர் தம்மிக்க கணேபொல ஆகிய இரு நீதியரசர்கள் அடங்கிய அமர்வுஇ இந்த மனுவை மே 9ஆம் திகதி ஆதரிப்பதற்காக ஒத்திவைத்தது