தமிழர் பகுதிகளில் இராணுவத்தினால் மக்களின் காணிகள் அபகரிப்பு தீவிரம்!
தமிழர் பகுதிகளில் அண்மை நாட்களாக படைத் தரப்புகளால் பொது மக்களின் காணிகள் அபகரிப்பு செயல்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இந்த விடயத்தில் மக்கள் பிரதிநிதிகள் அசமந்தமாக உள்ளனர் என்று
காணி உரிமைக்கான மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பினர் நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தனர்.
போர் முடிந்த பின்னரும் இராணுவத்தினர் ஆக்கிரமித்த நிலங்களை விடுவிக்கவில்லை. இது ஒரு படைத் தரப்பினரின் செயல்பாடு என்பதைத் தாண்டி அரச நிர்வாகங்கள் அனைத்துமே இதற்கு துணைபோகின்றன என்றே தெரிகிறது. அரசாங்க அதிபர் மற்றும் ஆளுநரும் இந்த காணி சுவீகரிப்புக்கு துணைபோகின்றனர். இதற்கு பொது அமைப்புக்கள் என்ற வகையில் நாங்கள் எதிர்ப்பையும் கண்டனங்களையும் தொடர்ச்சியாக
தெரிவித்து வரும் நிலையில், போராட்டங்களை முன்னெடுத்து வரும் சூழ்நிலையில் எங்களின் அரசியல் தலைமைகளோ தடுத்து நிறுத்தக்கூடிய விடயங்களையும் சவால் கொடுக்கக்கூடிய விடயங்களை
யும் செய்யவில்லை என்பதே உண்மை. இது எமக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
படையினர் அச்சுறுத்தி உறுதிப்பத்திரங்கள் இருக்கின்ற மக்களின் காணிகளையும் சுவீகரிக்கின்ற நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றனர். இப்படியான ஒரு சூழ்நிலையில் தமிழ் தலைமைகள் அசமந்தப் போக்கில் இருப்பதென்பது தமிழ் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இந்த விடயங்களை பாராளுமன்றத்திலும் சர்வதேசம் சார்ந்த மனித உரிமைகள் தளங்களிலும் பேசுபொருள் ஆக்கப்படவில்லை. இவை படையினருக்கு வாய்ப்பாகவே அமை கின்றது என்றனர்.