வாகன வரி அனுமதிப் பத்திரத்தை இணையம் ஊடாக பெறுவதில் தடை!
நாடு முழுவதும் வாகன வருமான அனுமதிப் பத்திரத்தை இணையம் ஊடாக பெற்றுக் கொள்ளும் செயற்பாடு தடைப்பட்டுள்ளது.
இணையம் ஊடாக இந்த வசதியைப் பெற்றுக் கொள்ளப் பிரவேசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் மாகாண காரியாலயங்களின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் தொழில் நுட்பப் பிரிவினர் இந்த நிலையை வழமைக்குக் கொண்டு வருவதற்குத் தொடர்ந்து சேவையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாடு முழுவதும் வாகன வருமான அனுமதிப் பத்திரத்தை இணையம் ஊடாக பெற்றுக்கொள்ளும் செயற்பாடு தடைப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துள்ளன.
இதனையடுத்து தகவல் தொழிநுட்ப முகவர் நிறுவனத்தை தொடர்பு கொண்டு வினவியபோது, இதற்குப் பதிலளித்த அதன் பேச்சாளர் ஒருவர், இணைய வசதியின் ஊடாக வாகன வருமான அனுமதிப் பத்திரத்துக்கான விண்ணப்பங்களை முன்வைப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
முன்னர் நாளாந்தம் இணையம் ஊடாக குறித்த வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு 30 பேர் பிரவேசித்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 60 ஆயிரமாக அதிகரித்துள்ள தாக அவர் கூறினார்.