அரசின் பலம் மீண்டும் நிரூபணம்; பஸிலின் 'பட்ஜட்' நிறைவேற்றம்! ஆதரவு 157, எதிர்ப்பு 64
2022ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் 3ஆம் வாசிப்பு மேலதிக 93 மேலதிக வாக்குகளால் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. ஆரம்பகட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், வரவு - செலவுத் திட்டத்தின் 3ஆம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமானது.
ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்த பின்னர், நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச பதிலளித்து உரையாற்றினார். மாலை 6.08 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் அரசுக்கு ஆதரவு வழங்கும் பங்காளிக் கட்சிகள் பாதீட்டின் 3ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது அதனை ஆதரித்து வாக்களித்தன.
ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன எதிராக வாக்களித்தன.
வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன தீர்மானம் எடுத்திருந்தாலும், கட்சிகளின் முடிவுக்கு மாறாகவே அக்கட்சிகளின் எம்.பிக்கள் வாக்கித்தனர். கட்சித் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோர் பாதீட்டை எதிர்த்து வாக்களித்தனர்.
அதேவேளை, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் 5 எம்.பிக்களும் பாதீட்டை எதிர்த்து வாக்களித்தனர்.
அரச பங்காளிக் கட்சிகள், அரசின் செயற்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வந்தன. இதனால் பாதீட்டின்போது மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தை அரசு இழக்கும் எனக் கூறப்பட்டது. ஆனாலும், மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்று பாதீட்டை நிறைவேற்றியுள்ளார் நிதி அமைச்சர் பஸில்.