இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுமா?
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதா இல்லையா என்பது குறித்து நாளை மறுநாள் (13) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது தொடர்பில் அரசாங்கத்தினுள் இரண்டு கருத்துக்கள் நிலவுகின்றன. சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதே டொலர் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வாக அமையும் என அரசாங்கத்தில் உள்ள ஒரு பகுதியினர் கருத்து தெரிவிக்கின்றனர். சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்வது பல்வேறு நிலைமைகளுக்கு வழிவகுக்கும் என்று இன்னொரு தரப்பினர் கருதுகின்றனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாளை மறுநாள்நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோரும் நாட்டின் பொருளாதார மற்றும் நிதி நிலைமைகள் தொடர்பில் அமைச்சரவைக்கு விளக்கமளிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு சுமார் 1,500 மில்லியன் அமெரிக்க டொலர்களாக சுருங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கையின் இறக்குமதிச் செலவைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த டொலர் சுமார் இரண்டு வாரங்களுக்குப் போதுமானதாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.