இலங்கையில் சுற்றுலா விடுதியொன்றிலிருந்து, தீ காயங்களுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவரின் சடலம் மீட்பு

Nila
2 years ago
இலங்கையில்  சுற்றுலா விடுதியொன்றிலிருந்து, தீ காயங்களுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவரின் சடலம் மீட்பு

தங்காலை − நக்குனுகமுவ பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றிலிருந்து, தீ காயங்களுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் நேற்றைய தினம் (15) கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெண்ணொருவர் வழங்கிய தகவலை அடுத்தே, சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மர்மமான முறையில் உயிரிழந்த நபர், 54 வயதான அமெரிக்க பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் 2014ம் ஆண்டு முதல் தங்காலை பகுதியில் தனது தாயுடன் தங்கியிருந்தமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

எனினும், இந்த நபரின் தாய் கடந்த 6 மாத காலமாக திக்வெல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நபருக்கு பெண்ணொருவரே உணவு வழங்கி வந்துள்ளதாகவும், நேற்றைய தினம் உணவு வழங்க வந்த வேளையிலேயே அவர் உயிரிழந்ததை அவதானித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இதையடுத்து, உணவு வழங்க வருகைத் தந்த பெண், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.