இன்றைய வேத வசனம் 17.12.2021

#Prayer
Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 17.12.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

எலியாவே, இங்கு உனக்கு என்ன காரியம்?

வல்லமையான பக்தி வைராக்கியத்தையும், இடைவிடாத ஊழியத்தையும் விட்டு விட்டு, சோர்வின் குகையில் படுத்திருந்த எலியாவைப் பார்த்து கர்த்தர் கேட்ட கேள்விதான் இது! (1 இராஜாக்கள் 19:14)
அனேக பரிசுத்தவான்கள் தவறான இடத்தில் இருப்பது எவ்வளவு வேதனையானது! நீங்கள் கர்த்தரின் சித்தத்தின் மையத்தில் இருக்கிறீர்களா? அல்லது சுயசித்தத்தில் நடக்கிறீர்களா?

அன்று யுத்தக்களத்தில் இருக்க வேண்டிய தாவீது. தன் வீட்டு உப்பரிகையின் மேல் உலாவி கொண்டிருந்ததால் அல்லவா, மிகப் பயங்கரமான பாவத்திற்குள் விழுந்தார்! (2 சாமுவேல் 11:2-5)
கிறிஸ்துவோடு பாடனுபவிக்க வேண்டிய பேதுரு, அரண்மனை சேவகரோடேகூட குளிர் காய்ந்து கொண்டிருந்ததினால்லவா, தன் அன்புக்குரிய இரட்சகரை மறுதலித்துச் சபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது! (மாற்கு 14:54)

நினிவேக்கு போக வேண்டிய யோனா, தரிஷீக்குப் போகிற கப்பலில் ஏறினதினாலல்லவா, பயங்கரமான மீனின் வயிற்றில் மூன்று நாட்கள் பாடுபட வேண்டியதிருந்தது (யோனா 1:3,17) யோனாவினால் யோனாவுக்கு மட்டும்மல்ல, கப்பலில் பிரயாணம் செய்த அத்தனை பேருக்கும் பாடுதான்!

ஆவிக்குரிய வழிகளிலே நடக்கவேண்டிய கொரிந்து சபையார் பொறாமைக்கும், வாக்குவாதத்திற்கும், பேதகத்திற்கும் இடம் கொடுத்தபடியாலல்லவா, "மாம்சத்திற்குரியவர்கள்" என்று அழைக்கப்பட வேண்டியதாயிற்று (1 கொரிந்தியர் 3:3)

தவறான இடத்திலிருக்கும் தேவபிள்ளைகளே, நீங்கள் சீர்திருந்தி தேவசித்தம் செய்யும்படி, கர்த்தர் நடத்தும் பாதைக்குள் வரமாட்டீர்களா?

எபிரெயர் 10:36
நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.