உள்ளூராட்சி தேர்தல் பிற்போடப்பட்டமை: அறிக்கை வெளியிட்ட பெப்ரல் அமைப்பு

Mayoorikka
2 years ago
உள்ளூராட்சி தேர்தல் பிற்போடப்பட்டமை: அறிக்கை வெளியிட்ட பெப்ரல் அமைப்பு

அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு உள்ளூராட்சிமன்ற தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமை தெளிவாக விளங்குகிறது  என பெப்ரல் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

 அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சருருக்கு தேர்தல் சட்டங்களுக்கு அமைய வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய உள்ளூராட்சிமன்ற தேர்தலை ஒரு வருடகாலத்திற்கு பிற்போடும் அமைச்சரவை பத்திரம் அமைச்சரவைக்கு கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினை கருத்திற் கொண்டு உள்ளூராட்சிமன்ற தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் தாக்கத்தினால் தேர்தல் பிற்போடப்படவில்லை என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

கொவிட் -19 வைரஸ் பரவல் தாக்கம் செலுத்தும் வேளையில் பாராளுமன்ற தேர்தலை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சிறந்த முறையில் நடத்தியது. தற்போதைய அரசாங்கம் கடந்த வருடங்களில் எதிர்க்கட்சி பதவியில் இருக்கும் போது உரிய நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு பல போராட்டங்களை முன்னெடுத்தது. அவர்களின் போராட்டங்களுக்கும்,முயற்சிகளுக்கும் பெப்ரல் அமைப்பு முழு ஒத்துழைப்பையும் வழங்கியது.

தேர்தலை நடத்துவதால் கொவிட் பரவல் தீவிரமடையுமா,தேர்தலுக்கு செலவாகும் 6 ஆயிரம் மில்லியன் தொடக்கம் 10 ஆயிரம் மில்லியன் வரையிலான நிதி அரசாங்கத்திடம் தற்போது உள்ளதா, தேர்தலுக்கு முன்னர் தேர்தல் முறைமை தொடர்பில் ஒரு தீர்வு கிடைக்கப் பெறுமா, பல மில்லியன் செலவழித்து தெரிவாகும் மக்கள் பிரதிநிதிகள் மீது மக்கள் முதலில் நம்பிக்கை கொண்டுள்ளார்களா,ஆகிய கேள்விகள் தோற்றம் பெற்றுள்ளன.

அரசியல் காரணிகளை அடிப்படையாக கொண்டு உள்ளூராட்சிமன்ற தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது என்பது தெளிவாக விளங்குகிறது.நல்லாட்சி அரசாங்கமும்,அதற்கு முற்பட்ட அரசாங்கமும் இவ்வாறான தன்மையில் செயற்பட்டன.

நாட்டின் தேர்தல் முறைமையை ஆட்சியாளர்கள் குறுகிய தேவைக்கேற்ப செயற்படுத்திக் கொள்வது ஜனநாயகத்திற்கு முரணானது. சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டு 90 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் மக்களின் வாக்குரிமை மறுக்கப்படுவது அடிப்படை உரிமைக்கு முரனானது.