முல்லைத்தீவு சிறுமி மரணம்: வெளியாகிய திடுக்கிடும் தகவல்

#Death
Mayoorikka
2 years ago
முல்லைத்தீவு சிறுமி மரணம்: வெளியாகிய திடுக்கிடும் தகவல்

 புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு வடக்கு  மூங்கிலாறு பகுதியில்  உயிரிழந்த சிறுமியின்  மரணம் தொடர்பில் மேலதிக செய்திகள் வெளியாகி உள்ளன.

கடந்த (19) திகதி நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் மாணவியின் பிறப்புறுப்பில் ஏற்பட்ட காயமே மரணத்திற்கான காரணம் என உறுதியாகியுள்ளது.

தனது வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவிலுள்ள சகோதரியின் வீட்டிற்கு கடந்த 15 ஆம் திகதி காலை சென்ற நிதர்சனா மாலை வரை வீடு திரும்பாதமையால் குடும்பத்தார் உறவினர்கள் தேட ஆரம்பித்தனர்.

பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸாரும் இராணுவத்தினரும் தீவிர தேடுதலை மேற்கொண்டதுடன் கிராம மக்களும் மாணவியை தேடி வந்தனர். ஆனால் கண்டுபிடிக்கப்படவில்லை

எனினும், மாணவி இறுதியாக சென்ற சகோதரியின் வீட்டிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில், கைவிடப்பட்ட காணியொன்றிலிருந்து நேற்று முன்தினம்  நிதர்சனாவின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டது.

வலது கை அற்ற நிலையில் மீட்கப்பட்ட சடலம் மீதான பிரேத பரிசோதனை, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவா தலைமையில் நேற்று (19) நடத்தப்பட்டது.

பிறப்புறுப்பில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக மாணவியின் மரணம் சம்பவித்துள்ளமை இதன்போது உறுதியானது.

சிறுமி உயிரிழந்து 3 தொடக்கம் 4 நாட்களாகியிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

சிறுமியின் வலது கையை நாய் கடித்து துண்டித்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரேத பிரிசோதனைகளின் பின்னர் சிறுமியின் உடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு நேற்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

06 பிள்ளைகள் கொண்ட குடும்பத்தின் கடைசிப் பிள்ளையான நிதர்சனா, திருகோணமலையிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 7இல் கல்வி கற்று வந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் உயிரிழந்த சிறுமியின் சகோதரியின் கணவர் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.