பட்டதாரிகளின் நடவடிக்கை முன்மாதிரியாகும்: ஓமல்பே சோபித தேரர்

#Colombo
Mayoorikka
2 years ago
பட்டதாரிகளின் நடவடிக்கை முன்மாதிரியாகும்: ஓமல்பே சோபித தேரர்

பட்டமளிப்பு நிகழ்வின்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பது முன் உதரணமானது என்று தெரிவித்துள்ள ஓமல்பே சோபித தேரர், இது ஒரு சிறந்த நடவடிக்கையாகும் என்றும் கூறினார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் தமது சுயமரியாதையை வெளிக்காட்டியுள்ளதாகவும், ஜனாதிபதியும் அரசாங்கமும் தமது நியமனத்தை உணர்ந்து செயற்பட வேண்டுமெனவும் அவர் கூறினார்.

எம்பிலிப்பிட்டியவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சோபித தேரர் இதனைக் கூறினார்.

அத்துடன் வணக்கத்துக்குரிய மகாநாயக்கர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்து மதத் தலைவர்களும் இதனை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

அரசியல் தனிப்பட்ட மற்றும் உறவுமுறை தொடர்பான பதவிகள் வழங்கப்படும் போது பெரும்பாலானவர்கள் வாய் மூடி பேசினாலும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

சொந்த பந்தம் காரணமாக நாடு ஒரு பேரழிவை எதிர்கொண்டுள்ளதாகவும், இதுவரையான தனது செயற்திட்டம் தோல்வியடைந்துள்ளது என்பதை ஜனாதிபதி இப்போதாவது உணர வேண்டும் எனவும் அவர் மேலும் இதன்போது தெரிவித்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் அவரிடமிருந்து பட்டப் பத்திரத்தை பெற்றுக் கொள்வதை தவிர்த்து அவரை கடந்து சென்று தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொண்ட மாணவர்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக கையில் கறுப்பு நிறத்திலான பட்டை அணிந்து வேந்தரிடமிருந்து பட்டப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதை தவிர்த்தனர்

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவினால் அபயராம விகாரையின் விகாதாதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர்  கடந்த மாதம் 17 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டார்.

முருந்தெட்டுவே ஆனந்த தேரர் கொழும்பு பல்கலைகழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டமைக்கு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் சங்கத்தினரும்,மாணவர் சங்கங்களும், விரிவுரையாளர்களும் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.