நிதியமைச்சர் நாட்டில் இன்மையால் தீர்மானம் எடுப்பதில் சிக்கல் - டலஸ் அழகப்பெரும
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதா, இல்லையா என்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரை இறுதித் தீர்மானத்தை எடுக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவது தொடர்பில் அரசாங்கம் கலந்துரையாடி வருவதாக தெரிவித்த அவர் , கடந்த சில அமைச்சரவைக் கூட்டங்களின் போது பல அமைச்சர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி தொடர்பாக தமது கருத்துக்களை வெளிப்படுத்தியதாகவும் கூறினார்.
நிதியமைச்சர் நாட்டில் இல்லாத போது இந்த விடயம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்க முடியாது எனவும், இந்தச் செயல்முறைக்கு மூன்று நிலைகள் இருப்பதாகவும், சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பான தீர்மானத்திற்கு அவர்கள் வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதியைப் பெறுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாட வேண்டும். இறுதி அனுமதியை வழங்குவதற்கு முன் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளையும் பரிசீலிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.