தமிழ்க் கட்சிகள் இந்திய பிரதமருக்குக் கடிதம் அனுப்புவது தொடர்பில் நடந்தது என்ன? சுமந்திரன் திசை திருப்பினாரா?

#SriLanka
Nila
2 years ago
தமிழ்க் கட்சிகள் இந்திய பிரதமருக்குக் கடிதம் அனுப்புவது தொடர்பில் நடந்தது என்ன? சுமந்திரன் திசை திருப்பினாரா?

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு கோரி இந்திய பிரதமரிடம் ஆவணம் ஒன்றைத் தயாரிக்கும் முயற்சிகள் இழுபறியில் இருப்பதாகத் தமிழத்தேசியக் கூட்டமைப்புத் தகவல்கள் கூறுகின்றன.

ரெலோ இயக்கத்தின் ஏற்பாட்டில், மூன்று கட்டங்களாக இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய ஐந்து பக்கம் ஆவணம் ஒன்று தயாரிக்கப்பட்டு அது தொடர்பாக மீள் ஆய்வு செய்வதென கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் முடிவெடுக்கப்பட்டது.

நேற்று அல்லது இன்று வியாழக்கிழமை குறித்த ஆவணத்தில் கையொப்பமிடப்படுமென கூட்டத்தின் முடிவின் பின்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக ஈபிஆர்எல்எப் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் நேற்றுப் புதன்கிழமை மாலை வினவியபோது,

ஆவணம் முழுமையாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆவணத்தில் மூன்று கூட்டங்களிலும் பங்குபற்றிய தமிழ், முஸ்லிம் கட்சிகள் கைச்சாத்திட முடியும். ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஐந்து பக்க ஆவணத்தில் பாரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்றுப் புதன்கிழமை மாலை ஊடகங்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ள தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் சுமந்திரன், தமிழ் கட்சிகள் தமது கோரிக்கையாக தயார் செய்த கடிதத்தின் தலைப்பு 13 ஆம் திருத்தத்தை அமுல்படுத்த கோருதல் என இருந்த நிலையில், தற்போது ‘தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்’ என மாற்றப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

தமிழ்க் கட்சிகள் இந்திய பிரதமரிடம் முன்வைக்கவுள்ள கடிதத்தின் பொருள் மாற்றப்பட்டுள்ளது என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட விசேட அறிக்கையின் முழுமையான விபரம் பின்வருமாறு-

தமிழ் கட்சிகள் தமது கோரிக்கையாக தயார் செய்த கடிதத்தின் தலைப்பு ’13 ஆம் திருத்தத்தை அமுல் படுத்த கோருதல்’ என இருந்த நிலையில், தற்போது ‘தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்’ என மாற்றப்பட்டுள்ளது.

புதிய வரைவு தயாரிக்கப்பட்ட போது அதன் நோக்கம், பொருள் என்பன மாற்றப்பட்டே புதிய ஆவணம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணமும் தற்போது ஒரு வரைபாகவே இருக்கிறது. இந்த வரைபை அல்லது இதன் திருத்தத்தை கட்சிகள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே இது கைச்சாத்திடப்படும்.

சில ஊடகங்கள் தொடர்ந்தும் தவறான தலைப்பில் இது சம்பந்தமான செய்திகளை வெளியிடுவதனால் இந்த முக்கிய ஊடக அறிக்கை வெளியிடப்படுகிறது எனக் குறிப்பிட்டு சுமந்திரன் கையொப்பமிட்டுள்ளார்.

சுமந்திரன் அனுப்பிய இந்த ஊடக அறிக்கை தொடர்பாக சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் மீண்டும் தொடர்பு கொண்டபோதும், அவருடைய கைத்தொலைபேசி அழைப்பு இணைக்கப்படவில்லை.

ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் கையடக்கத் தொலைபேசி அழைப்பும் இணைக்கப்படவில்லை. சுமந்திரனுடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை.

இது குறித்துத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

புதிய வரைபு கிடைத்துள்ளது. அதில் தனது கட்சி சார்பாகச் சில திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னரே தன்னால் கைச்சாத்திட முடியும்.

எமது பிரச்சினைகளை நாங்களே பேசித் தீர்மானிக்க வேண்டும். அமெரிக்காவோ இந்தியாவோ எமது பிரச்சினைகளைத் ஒருபோதும் தீர்க்காது. அந்த நாடுகள் தமது புவிசார் நலன்களில் மாத்திரமே கவனம் செலுத்தும்.

வடக்குக் கிழக்கு மக்களின் அரசியல் தீர்வுக்கான கோரிக்கையாக இந்த ஆவணம் தயாரிக்கப்படவில்லை. மாறாக வடக்குக் கிழக்கு, மலையகம் மற்றும் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் சமகாலப் பிரச்சினைகள் தொடர்பான அவதானக் குறிப்பாகவே இந்தியப் பிரதமரிடம் ஆவணம் அனுப்பப்படும்.

அந்த ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அம்சங்களில் 13 ஆவது திருத்தச் சட்டமும் ஒன்றெனவும் அவர் விபரித்தார்.

கூட்டத்தில் பங்குபற்றிய அனைத்துக் கட்சிகளின் திருத்தங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டதொரு நிலையில் மாத்திரமே குறித்த ஆவணத்தில் கைச்சாத்திடுவது என்றும் மனோ கணேசன் தெரிவித்தார்.

சுமந்திரன் அனுப்பிய ஊடக அறிக்கையில் உள்ள புதிய தலைப்பு; செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணைந்தே மாற்றியதாகவும், கூறிய மனோ கணேசன், மலையக மக்கள் சார்பான தனது நிலைப்பாட்டையும் முஸ்லிம் மக்கள் சார்பான நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் முன்வைத்ததாகவும் கூறினார்.

13ஆவது திருத்தச் சட்டத்தை மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற விவகாரம் மாத்திரமல்ல, வடக்குக் கிழக்குக்கு வெளியில் வாழும் மலையகத் தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் சமகாலப் பிரச்சினைகள் அடங்கிய ஆவணமாக பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பவுள்ளதாகவும் அவர் அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.

குறித்த ஆவணத்தில் நேற்று அல்லது நாளை கட்சித் தலைவர்கள் அனைவரும் கைச்சாத்திட வாய்ப்பில்லை என்ற தொனி மனோ கணேசனின் கருத்தில் தென்பட்டது.

அத்துடன், வடக்குக் கிழக்குத் தமிழர்கள். மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகியோரின் அரசியல் பிரச்சினைகளைத் தீர்த்து வையுங்கள் என்ற கோரிக்கை எதுவும் நரேந்திரமோடியிடம் முன்வைக்கப்படவில்லை. மாறாகச் சமகாலப் பிரச்சினைகள் பற்றிய அறிக்கையிடல் மாத்திரமே என்ற தொனியும் மனோ கணேசனின் கருத்தில் தெளிவாகவே வெளிப்பட்டிருந்தது.

இந் நிலையில், இந்தியப் பிரதமருக்கு அனுப்பப்படவுள்ள ஆவணம் தொடர்பாக இதுவரை உரிய முடிவுகள் எடுக்கப்படவில்லையென அறிய முடிகின்றது.

இந்த ஆவணம் தயாரிப்புத் தொடர்பாக ரவூக் ஹக்கீமிடம் தொடர்புகொள்ள முற்பட்டபோதும் தொலைபேசி அழைப்பு இணைக்கப்படவில்லை.

ஆனாலும் ஆவணத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று மாலை கொழும்பில் கூடி ஆராய்ந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, 13 அரசியல் தீர்வு என்றோ அல்லது இந்தியா சொல்லி இலங்கை 13ஐ உடனடியாக அமுல்படுத்தும் என்றோ தாங்கள் கருதவில்லையென சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார்.

ஆனால், இந்த ஆவணத்தை நரேந்திரமோடியிடம் கையளிப்பதன் ஊடாக இந்தியாவின் கவனத்தை திருப்ப முடியுமெனவும், அதனை ஒட்டுமொத்த தமிழ் முஸ்லிம் கட்சிகளின் கோரிக்கையாக இந்திய அவதானிக்கும் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் கூறினார்.