ஒரு ஆளுக்கு ஒரு சட்டம்; மனோ கணேசன் காட்டம்!

Reha
2 years ago
ஒரு ஆளுக்கு ஒரு சட்டம்; மனோ கணேசன் காட்டம்!

அமைச்சர் அலி சப்றியை பதவி விலக சொல்லும் ஞானசார தேரரை, ஜனாதிபதி செயலணிக்கு, ஜனாதிபதி கோட்டாபயதான் நியமித்தார். அதேவேளை அமைச்சர் அலி சப்றியையும், கேபினட் அமைச்சராக இதே ஜனாதிபதிதான் நியமித்தார்.

இந்நிலையில், ஜனாதிபதியின் நியமனமான ஞானசாரர், ஜனாதிபதியின் அமைச்சரை பதவி விலக சொல்கிறார் என்றும் இதென்ன கேலி கூத்து? எனவும் மனோகணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்கட்சி அரசியல்வாதிகள் இப்படி சொன்னால் அதில் ஒரு அரசியல் தர்க்கமாவது இருக்கும். அப்படியும் நான் அதை சொல்ல மாட்டேன். அரசை நாம் கடுமையாக எதிர்ப்பது என்பது வேறு. ஆனால் இந்த அரசுக்குக்கு உள்ளே சிறுபான்மை கேபினட் அமைச்சர்கள் இருப்பது நல்லது. நாம் விரும்பினாலும், விரும்பி விட்டாலும் இதுதான் இலங்கை அரசு எனவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர்கள் அலி சப்றி, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அங்கே இருப்பதால் தமிழ் பேசும் மக்களின் குறைந்தபட்ச பிரச்சினைகளையாவது அரசாங்க தலைமையின் கவனத்திற்கு கொண்டு வர முடிகிறது.

இவ்வாறான நிலையில் இந்த குறைந்தபட்ச அவகாசத்தையும் கூட தட்டி பறிக்க இந்த காவி பயங்கரவாதி முயல்கிறார் என தெரிவித்த மனோகணேசன், ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக இவர் பேசுகிறார் என்றும் கூறினார்.

எனினும் அவர் மீது சட்டம் பாயாது ஆனால், முகநூலில் எதையாவது சிறுபிள்ளைத்தனமாக எழுதி விடும் தமிழ் பையன்களை தேடி வீட்டுக்கு பொலிஸ் வருகிறதாக சுட்டிக்காட்டிய அவர், இந்த ஆளுக்கு விசேட சட்ட விலக்கு இருக்கிறதாகவும் ஆகவே, இவரது செயலணியின் பெயரை "ஒரு ஆளுக்கு ஒரு சட்டம்" என நான் பிரேரிக்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.

அதேபோல், அவரது வாயில் வருவதை எல்லாம் பேசும் நடத்தையை ஆட்சேபித்து, இந்த செயலணியில் இருக்கும் தமிழ், முஸ்லிம்கள் உடன் பதவி விலக வேண்டும் என்றும், இல்லா விட்டால் இந்த பாவம் அவர்களையும் சேரும் எனவும் மனஓகணேசம் தெரிவித்தார்.