குறைதீர்க்கும் பத்துக் கரம் கொண்ட ஆஞ்சநேயர்.

#spiritual #God
குறைதீர்க்கும் பத்துக் கரம் கொண்ட ஆஞ்சநேயர்.

நாம் இதுவரை இரண்டு கைகள் கொண்ட ஆஞ்சநேயரைத் தான் தரிசித்திருப்போம். ஆனால், பத்து கைகள் மூன்று கண்கள் கொண்ட ஆஞ்சநேயரைத் தரிசிக்க வேண்டுமானால், நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலத்திலுள்ள ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீரஆஞ்சநேயர் திருக்கோயிலுக்குச் செல்ல வேண்டும்.

மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலில் தனிச் சன்னதியில் ஆஞ்சநேயர் வீற்றிருக்கிறார்.  மூன்று கண்களையும், பத்துக் கரங்களையும், அந்தக் கரங்களில் எல்லாம் சங்கு, சக்கரம், வில், அம்பு, சூலம் போன்ற ஆயுதங்களை ஏந்தி, முதுகின் இருபக்கமும் கருடனுக்குரிய சிறகுகளோடு காட்சித் தருகிறார்.  இதுபோன்ற ஆஞ்சநேயர் திருமேனி இங்கு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் யுத்தம் முடிந்து ராமர் அயோத்தி திரும்பும் வழியில் பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் தங்கினார். அப்போது அங்கே வந்த நாரதர் ராமனிடம், இலங்கையில் யுத்தம் இன்னும் முடிவடையவில்லை. உனது வில்லுக்கு இன்னும் வேலை உள்ளது. அரக்கர்களின் வாரிசுகள் சிலர் உயிருடன் உள்ளனர். அவர்கள் ராவணனின் அழிவால் மிகுந்த கோபத்துடன் உள்ளனர்.

பழிக்குப்பழி வாங்கும் வகையில் உன்னை அழிப்பதாக சபதம் செய்துள்ளனர். இரக்கபிந்து, இரக்தராட்சகன் என்ற அசுரர்கள் கடலுக்கடியில் தவம் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த தவம் பூர்த்தியானால் இறந்து போன அனைத்து அசுரர்களும் உயிர் பெறுவார்கள். எனவே நீ அவர்களை அழித்து தவத்தை முற்றுப்பெறாமல் செய்ய வேண்டும்,’ என்றார். உடனே ராமன், “”மகரிஷியே! அந்த அரக்கர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் தான். ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் அயோத்தி திரும்பாவிட்டால் தம்பி பரதன் தீக்குண்டத்தில் இறங்கி உயிரை விட்டு விடுவான்.

எனவே நீங்கள் வேறு யார் மூலமாவது அசுரர்களை அழிக்க ஏற்பாடு செய்யுங்கள்’ என்றார். அதற்கு நாரதர் தன்னுடன் லட்சுமணனை அனுப்பும்படி கேட்டார். லட்சுமணன் என் நிழல் போன்றவன். அவனை அனுப்ப என்னால் முடியாது. இதற்கெல்லாம் சரியான நபராக ஒருவர் இருக்கிறார். அழியா வரம் பெற்றவரும், அளவிலா ஆற்றல் பெற்றவரும், அஷ்டமா சித்திகள் கற்றவருமான அனுமனை அனுப்புகிறேன், என்றார்.

திருமால் அனுமனுக்கு சங்கு, சக்கரத்தை கொடுத்தார். பிரம்மா பிரம்ம கபாலத்தை கெடுத்தார். ருத்ரன் மழு (கோடரி) தந்தார். ராமன் வில்லையும் அம்பையும் கொடுத்தார். இந்திரன் வஜ்ராயுதத்தை கொடுத்தார். கருடன் தனது பங்கிற்கு இறக்கைகளை கொடுத்தார்.

இப்படி தெய்வங்கள் வழங்கிய ஆயுதங்களுடன் ஆஞ்சநேயர் பத்து கரங்களில் பத்து விதமான ஆயுதங்களுடன் காட்சிதந்தார். சிவன், தனது சிறப்புக்குரிய நெற்றிக்கண்ணை வழங்கினார். இந்த ஆயுதங்களுடன் அனுமன் புறப்பட்டு கடலுக்கடியில் தவமிருந்த அசுரர்களை அழித்து அயோத்தி திரும்பினார். திரும்பும் வழியில் கொண்டு சென்ற ஆயுதங்களுடன் ஆனந்தமயமாக இத்தலத்தில் தங்கியதால் “ஆனந்தமங்கலம்’ என பெயர் பெற்றது. நாளடைவில் அனந்தமங்கலம் ஆனது.

அனுமன் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர். தலைவன் இட்ட பணியை சிறப்பாக முடித்தவர். அனுமனைப்போல் ஒரு செயல் வீரனை இந்த உலகில் பார்ப்பது கடினம். அனுமனை வழிபாடு செய்பவர்களுக்கு எந்த கிரக பாதிப்பும் தோஷமும் இருக்காது. இவருக்கு வெண்ணெய்க் காப்பு சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால் நமது குறைகள் வெண்ணை உருகுவது போல் உருகி விடும்.