கிறிஸ்துமஸ் தினத்தன்று எதற்க்கு குடில் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றப்படுகிறது தெரியுமா?

Keerthi
2 years ago
கிறிஸ்துமஸ் தினத்தன்று எதற்க்கு குடில் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றப்படுகிறது தெரியுமா?

கிறிஸ்மஸ் என்றாலே கிறிஸ்மஸ் குடில்கள், கிறிஸ்மஸ் மரங்கள் (சவுக்கு மரம்), சாந்தா கிளாஸ்-கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டைகள் போன்றவை நமக்கு உடனடியாக நினைவுக்கு வருகின்றன. 
நீங்கள் அனுப்பிவரும் கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டைகளும் இவற்றையே எமக்கு நினைவுபடுத்துகின்றன. 

உரோமையில் ஆலயங்கள், இல்லங்கள் தவிர, அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், சிறிய, பெரிய பொது வளாகங்கள், இரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் என எல்லா இடங்களிலும் கிறிஸ்மஸ் குடில்களும் மரங்களும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

கிறிஸ்தவ வரலாற்றில் முதன்முறையாக இத்தாலியில்தான் 1223ம் ஆண்டில் கிறிஸ்மஸ் குடில் வைக்கப்பட்டது. 
இது உருவாகக் காரணமாக இருந்தவர் அசிசி நகர் புனித பிரான்சிஸ். இவர் இறப்பதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர் புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொண்டு திரும்பியிருந்தார். 
அவர் வாழ்ந்த துறவு இல்ல ஆலயம் சிறியதாக இருந்ததால், அவ்வாண்டு கிறிஸ்மஸை அசிசி நகருக்கு அருகிலுள்ள Grecio எனும் ஊரில் சிறப்பிக்க விரும்பினார். ஆதலால், புனித பிரான்சிஸ், Grecioவில் வாழ்ந்த பக்தியுள்ள, அனைவராலும் உயர்வாக மதிக்கப்பட்ட Giovanni Velitta என்பவரை கிறிஸ்மஸ்க்கு ஒரு வாரத்துக்கு முன்னர் அணுகினார். அவரிடம், இவ்வாண்டு நாம் எல்லாரும் சேர்ந்து Grecioவில் கிறிஸ்மஸைச் சிறப்பிக்க நீர் விரும்பினால் உடனடியாகச் சென்று நான் சொல்வதுபோல் செய்யும் பெத்லகேமில் மாட்டுத்தீவனத் தொட்டிலில் குழந்தை இயேசு கிடத்தப்பட்டிருப்பதையும், அந்தத் தொட்டிலுக்கு இரு பக்கங்களிலும் கழுதையும் காளையும் நிற்பதைப் போலும் ஒரு குடில் அமையும். 

இதனை நான் எனது கண்களால் பார்க்க விரும்புகிறேன் என்று புனித பிரான்சிஸ் சொன்னார். 
அந்த நல்ல மனிதர் Giovanniம் புனிதர் விருப்பத்தை உடனடியாக நிறைவேற்றும் முயற்சியில் இறங்கினார். 
புனித பிரான்சிஸ் தனது சபையின் மற்ற இல்லங்களுக்கும், அவ்வூருக்குச் சுற்றுப்புறத்தில் வாழ்வோர் அனைவருக்கும் இச்செய்தியை சொல்லி அனுப்பினார். 

1223ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி நள்ளிரவில் அனைவரும் மெழுகுதிரிகளுடன் Grecioவில் மரங்களுக்கு மத்தியில் அமைக்கப்பட்டிருந்த குடிலைப் பார்க்க வந்தனர். அந்த நள்ளிரவை மெழுகுதிரிகளின் ஒளியால் நிரப்பினர். 

அங்கே உயிருள்ள கழுதையும் காளையும் இருந்தன. வைக்கோல்கள் நிறைந்திருந்த மாட்டுத் தொழுவத்தையும், காலியான தீவனத்தொட்டிலையும் பார்த்தனர். Grecioவின் அவ்விடம், இயேசுவின் பிறப்புச்சூழலை தத்துவரூபமாக, புதிய பெத்லகேமாக மாறியிருந்தது. 

மக்கள் மகிழ்ச்சியினால் பாடினர். கிறிஸ்மஸ் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. புனித பிரான்சிஸ் குருப்பட்டம் பெறாதவர் என்பதால் அவர் திருப்பலி நிறைவேற்றவில்லை, ஆனால் உருக்கமான மறையுரையாற்றினார். 

திருப்பலிக்குப் பின்னர் அந்தத் தீவனத்தொட்டிலில் குழந்தை இயேசு படுத்திருப்பதாக நினைத்து அதனருகில் விரித்த கரங்களுடன் சென்றார் புனித பிரான்சிஸ். அப்போது அங்கே அதிசயம் ஒன்று நடந்தது. குழந்தை இயேசு மிகுந்த ஒளியுடன் அத்தொட்டிலில் தோன்றினார் எனச் சொல்லப்படுகிறது. இவ்வாறு முதல் உயிருள்ள கிறிஸ்மஸ் குடில் Grecioவில் அமைக்கப்பட்டது.

இயேசுவின் பிறப்பைச் சித்தரிக்கும் கிறிஸ்மஸ் குடில் அமைக்கும் புனித பிரான்சிஸ் அசிசியாரின் இந்த எண்ணம் கிறிஸ்தவ உலகில் வெகு வேகமாகப் பரவி, ஆலயங்களிலும் வீடுகளிலும் குடில்கள் அமைக்கப்பட்டன. ஜெர்மானியர்கள் இந்தப் பழக்கத்தை அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு எடுத்துச் சென்றனர். 

ஆயினும், தொடக்ககாலக் கிறிஸ்தவர்கள் இயேசு பிறப்பு நிகழ்வை ஏறக்குறைய 380ம் ஆண்டிலே ஓவியமாகச் சுவர்களில் வரைந்துள்ளனர். இதனை 1877ம் ஆண்டில் உரோம் புனித செபஸ்தியார் அடிநிலக் கல்லறைகளில் அகழ்வராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

“காளை தன் உடைமையாளனை அறிந்து கொள்கின்றது, கழுதை, தன் தலைவன் தனக்குத் தீனிபோடும் இடத்தைத் தெரிந்துகொள்கின்றது” என, எசாயா இறைவாக்கினர்(1:3) சொல்லியிருப்பதுபோல், குடில்களில் கழுதையும் காளையும் கட்டாயமாக வைக்கப்படுகின்றன. தாழ்மையான வீட்டு விலங்குகள் குழந்தை இயேசுவுக்கு முதல் அடைக்கலம் கொடுத்து, தங்களின் மூச்சுக்காற்றால் அவ்விடத்து மார்கழிக் குளிரைப் போக்கின என்ற காரணத்தினால், கிறிஸ்மஸ் நள்ளிரவில் விலங்குகளுக்குப் பேசும்கொடை வழங்கப்பட்டுள்ளது என்று பாரம்பரியமாகச் சொல்லப்பட்டு வருகிறது. 

குழந்தை இயேசுவுக்கு உயிரினங்கள் செய்த இச்செயலுக்கு நன்றியாக, புனித பிரான்சிஸ், கிறிஸ்மஸ் நள்ளிரவில் மரங்களுக்கு அடியில் ரொட்டித் துண்டுகளைச் சிதறவிடுவார் எனவும், விவசாயிகள் தங்கள் காளைகளுக்கும் கழுதைகளுக்கும் அதிகமான உணவு கொடுக்குமாறு அப்புனிதர் கேட்டுக்கொண்டதாகவும் அப்புனிதர் பற்றிய வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் முதல் கிறிஸ்மஸ் குடிலை 1982ம் ஆண்டில் முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் தொடங்கி வைத்தார். திருவருகைக் காலத்தில் மகிழ்ச்சி ஞாயிறு எனச் சொல்லப்படும் மூன்றாவது ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் சிறார் தங்கள் குடில்களில் வைக்கும் குழந்தை இயேசு திருவுருவத்தைக் கொண்டுவந்து திருத்தந்தையின் ஆசீர் பெறுகின்றனர். 

இந்தப் பழக்கத்தை 1968ம் ஆண்டில் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் தொடங்கி வைத்தார். 
இப்படியான நல்லதகவல்களை அறிந்துகொள்ள எமது லங்கா4.கொம் ஊடகத்துடன் இணந்திருங்கள்.