கோட்டாபய மகிந்த அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் திட்டம்!

Reha
2 years ago
கோட்டாபய மகிந்த அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் திட்டம்!

ஆளும் தரப்பில் உள்ளவர்களையும் இணைத்துக் கொண்டு கோட்டாபய மகிந்த அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த திட்டம் இரகசியமாக மேற்கொள்ளப்படுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திர கட்சி ஜே.வி.பி.யுடன் இணைந்து பயணிக்க தயார் என்று அறிவித்துள்ளது, இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து விளக்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

“ஜே.வி.பி. இந்த சந்தர்ப்பத்திலேயே பொறுப்புடன் செயற்பட வேண்டும். நாட்டில் ஏற்பட்டுள்ள சில நிலவரங்களுக்கு அவர்களும் பொறுப்பு கூற வேண்டும்.

2005 இல் மகிந்த ராஜபக்ச ஆட்சியமைப்பதற்கு முன்னின்று செயற்பட்டது யார்? அன்று ஜே.வி.பி. ஆதரவளித்திருக்காவிட்டால் மகிந்த ராஜபக்ச அரச அதிபராக தெரிவு செய்யப்பட்டிருக்க மாட்டார்.

அது மாத்திரமின்றி 2002 இல் சந்திரிகா குமாரதுங்க ஆட்சியில் பங்கேற்று 8 அமைச்சுக்களில் பதவிகளையும் வகித்தனர். ஆனால் நாட்டில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

எனவே எதிர்தரப்பிலுள்ள அனைவரும் ஒரே நிலைப்பாட்டுக்கு வருவார்களாயின் எதிர்க்கட்சியனர் மாத்திரமின்றி , ஆளுந்தரப்பில் அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்களையும் இணைத்துக் கொண்டு பயணிக்க நாம் தயார்.

அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைந்து பாரிய அரசியல் அரங்கை கட்டியெழுப்புவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது. எதிர்காலத்தில் இது நடைபெறும்.

தற்போதும் நாம் பல்வேறு தரப்பினருடனும் இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். இந்த பேச்சுவார்த்தைகளின் இரகசிய தன்மையைப் பேணுவதற்காகவே நாம் பெயர்களை வெளியிடாமல் இருக்கின்றோம்.

மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து அவர்களை மீட்ப்பதற்கு அரசியல் அரங்கொன்று கட்டியெழுப்பப்பட வேண்டும். ஜே.வி.பி. உள்ளிட்ட ஏனைய அனைத்து கட்சிகளுக்கும் அதற்கான வாய்ப்பு திறந்தே காணப்படுகிறது.

நாமனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஒவ்வொரு தரப்பினரும் பிரிந்து செல்ல செல்ல அது அரசாங்கத்திற்கு சாதகமாகவே அமையும். அதனை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.