பிக்பாஸ் மேடையில் வாய்ப்பு கேட்ட தயாரிப்பாளர்..

Prabha Praneetha
2 years ago
பிக்பாஸ் மேடையில் வாய்ப்பு கேட்ட தயாரிப்பாளர்..

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது நடிப்பு, அரசியல் என்று பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதுதவிர விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வருகிறார்.

அவர் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை ஐந்து சீசன்களாக நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். அவருடைய நடிப்புக்கு எவ்வளவு ரசிகர்கள் இருந்தார்களோ அதை விட அதிகமாக இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இரண்டு எலிமினேஷன் நடந்தது. அதில் அக்ஷரா மற்றும் வருண் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று வெளியேறினர்.

அப்போது போட்டியாளர் வருணின் உறவினரும், சினிமா தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அவரை நடிகர் கமல்ஹாசன் வரவேற்று பேசினார். அப்போது வருண் நடித்த ஜோஸ்வா திரைப்படத்தின் ட்ரெய்லர் கமல்ஹாசன் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

அதன் பிறகு போட்டியாளர்களிடம் பேசிய ஐசரி கணேஷ், வருணுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் என்னுடைய தயாரிப்பில் வாய்ப்பு இருக்கிறது என்று கூறி அவர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் அவர் கமல்ஹாசனிடம் ஒரு சின்ன கோரிக்கையையும் வைத்தார்.

அதாவது நீங்கள் விக்ரம், இந்தியன் 2 உட்பட பல படங்களில் தற்போது நடித்து வருகிறீர்கள். அந்த படங்களுக்கு பிறகு எங்கள் கம்பெனிக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று பகிரங்கமாக வேண்டுகோள் வைத்தார். அதற்கு கமல் ஹாசன் தனக்கே உரிய பாணியில் மிகவும் சுவாரஸ்யமாக பதிலளித்தார்.

பொதுவாக நான்கு பேர் முன்னிலையில் தான் அட்வான்ஸ் கொடுப்பார்கள், ஆனால் நீங்கள் பல கோடி மக்களின் முன்னிலையில் அட்வான்ஸ் கொடுத்து விட்டீர்கள் என்று கூறினார். அதற்கு ஐசரி கணேஷ் நீங்கள் கூறினால் இப்பவே பேசி முடித்து அட்வான்ஸ் கொடுத்து விடலாம் என்று சொன்னார்.

அதற்கு கமல் நான் நட்பு என்னும் அட்வான்சை பற்றி தான் சொன்னேன், அதை நீங்கள் ஏற்கனவே கொடுத்துவிட்டீர்கள். மேலும் ராஜ்கமல் நிறுவனம் வேறு, உங்கள் நிறுவனம் வேறு அல்ல எல்லாம் ஒன்றுதான் என்று கூறினார். இருப்பினும் வாய்ப்பு கேட்ட ஐசரி கணேஷுக்கு கமல்ஹாசன் சரி என்று நேரிடையாகக் கூறாமல் தன்னுடைய பாணியில் பதில் கூறினார். இதன் மூலம் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சி சற்று நேரம் கலகலப்பாக இருந்தது.