சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா; புதிதாக 207 பேருக்கு தொற்று உறுதி

Keerthi
2 years ago
சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா; புதிதாக 207 பேருக்கு தொற்று உறுதி

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் வரும் பிப்ரவரி மாதம் குளிர்கால ஒலிம்பிக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதன்படி சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 207 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அங்கு 197 பேருக்கு கொரோனா உறுதியாகி இருந்தது. புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 51 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் 156 பேர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளாதவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,01,890 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாத நிலையில், அங்கு இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,636 ஆக உள்ளது. 

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், தற்போது அங்கு திடீரென அதிகரித்து வரும் கொரோனா காரணமாக, போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் சினாவில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக குற்றம் சாட்டி அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.