இங்கிலாந்து ராணி போன்று ஆடை உடுத்திய குழந்தை' - கடிதம் எழுதி இன்ப அதிர்ச்சி கொடுத்த ராணி

Keerthi
2 years ago
இங்கிலாந்து ராணி போன்று ஆடை உடுத்திய குழந்தை' - கடிதம் எழுதி இன்ப அதிர்ச்சி கொடுத்த ராணி

தன்னைப் போன்று உடை அணிந்து ஃபோட்டோ அனுப்பிய ஒரு வயது குழந்தைக்கு, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடிதம் எழுதிய சம்பவம் வைரலாகி வருகிறது.

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் அக்டோபர் 31 ஆம் தேதி அன்று இறந்தவர்களை மகிழ்விக்கும் நாளாக கருதி திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிறுவர், சிறுமிகள் மாறுவேட உடையணிந்து வீடுவீடாக சென்று இனிப்பு, பரிசு, பணம் ஆகியவை பெற்று மகிழ்வது வழக்கம்.

அந்த வகையில் கடந்த வருடம் அக்டோபர் 31 ஆம் தேதி அமெரிக்காவை சேர்ந்த ஜெலைன் சதர்லேண்ட் என்ற குழந்தை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் போன்று உடையணிந்து அசத்தியுள்ளார்.

ஜெலைன் என்ற அந்தக் குழந்தை இளம் நீலவண்ணத்தில் கவுன் அணிந்து, அதற்கு ஏற்றாற்போல் வெள்ளை விக், பொருத்தமான தொப்பி, கழுத்தில் முத்து மாலைகளை அணிந்து இங்கிலாந்து ராணியின் குடும்பத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உடையணிந்திருந்தார்.

குழந்தையுடன் அவர்கள் வீட்டு வளர்ப்பு நாய்களும் பாதுகாவலர்கள் போன்று நின்று கொண்டிருந்தது. இதனை ஃபோட்டாவாக எடுத்து ஜெலனைனின் தாயார், பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், இந்த புகைப்படத்தை பார்த்த இங்கிலாந்து ராணி தனது அரண்மனையை சேர்ந்த நிர்வாகிகள் மூலம் குழந்தை ஜெலைனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், 'உங்கள் குழந்தையின் நேர்த்தியான உடை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை மிகவும் கவர்ந்தது. மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சதர்லேண்ட் குடும்பத்திற்கு இங்கிலாந்து ராணியின் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்' இவ்வாறு கடிதம் அனுப்பியிருந்தார்.

பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வந்த இந்த கடிதம் மற்றும் குழந்தை ஜெலைனின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்