கடந்த ஆண்டில் மட்டும் 3373 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள்
2021 ஆம் ஆண்டில் மட்டும் 3,373 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான தேசிய தினத்தை முன்னிட்டு நேற்று விடுத்துள்ள அறிக்கையில் அதிகார சபையின் தலைவர் உதய குமார அமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் 598 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியுள்ளன.
தந்தையினால் சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் 1342, தாயினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக 718 வழக்குகள் மற்றும் பெற்றோர் இருவராலும் சிறுவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக 191 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த வருடத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களால் சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக 98 முறைப்பாடுகளும், பாதுகாவலர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக 64 முறைப்பாடுகளும் அதிகார சபைக்கு கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதய குமார அமரசிங்க தெரிவித்தார்.
பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு பொறுப்பானவர்களினால் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி வருவது ஒரு துரதிஷ்டம் என தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கு அனைத்துத் தரப்பினரும் மிகவும் உணர்வுபூர்வமாகவும் துரிதமாகவும் செயற்பட வேண்டிய நேரம் வந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.