சாவகச்சேரியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட 5ஜீ கோபுரங்கள் ;அச்சத்தில் மக்கள்!

#Jaffna
Nila
2 years ago
சாவகச்சேரியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட 5ஜீ கோபுரங்கள் ;அச்சத்தில்  மக்கள்!

தென்மராட்சியில் சாவகச்சேரி நகரசபைக்கு உட்பட்ட மீசாலை மற்றும் கிராம்புபில் பிரதேசங்களில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஸ்மாட் லாம்போல் கோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டு தொலைத்தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இதனால் தென்மராட்சி மக்கள் பெரும் அச்சத்துக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகியுள்ளனர்.

யாழ் மாநகர சபை எல்லைக்குள் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஸ்மாட் லாம்போல் கோபுரங்களை நிறுவ முற்பட்ட பொழுது கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்த வேலைகள் நிறுத்தப்பட்டிருந்தன.

பின்னர் அந்த கோபுரங்களில் எந்தவிதமான தொலைத்தொடர்பு சாதனங்களும் பொருத்தப்பட மாட்டாது என்ற நிபந்தனையோடு மாநகரசபை எல்லைக்குள் குறித்த கோபுரங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக தென்மராட்சியின் சாவகச்சேரி நகர சபைக்குட்பட்ட மீசாலை மற்றும் கிராம்புவில் கிராமப்பகுதிகளில் தனியார் தொலைத்தொடர்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதில் தொலைத்தொடர்பு (அன்ரனாக்கள்) கருவிகள் பொருத்தப்பட்டுள்ளமை தென்மராட்சி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் சாவகச்சேரி நகர சபை தவிசாளர் சிவமங்கை இராமநாதனிடம் கேட்டபொழுது, குறித்த கோபுரங்கள் நிர்மாணிக்கப்படுவதாக பொதுமக்களினால் நகரசபைக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து எமது அதிகாரிகள் சென்று குறித்த கோபுர நிர்மாண பணிகளை நிறுத்துமாறு கடந்த 10 நாட்களுக்கு முதல் அறிவித்தல் வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் குறித்த கோபுரங்கள் நகரசபையின் எந்தவிதமான அனுமதிகளும் பெறமால் நிர்மாணிக்கப்பட்டு சட்டவிரோதமாக தொலைத்தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தவிசாளர் தெரிவித்தார்.

வடக்கில் குறித்த தனியார் தொலைதொடர்பு நிறுவனம் ஸ்மார்ட் லாம்போல் என்ற பெயரில் தொலைத்தொடர்பு கோபுரங்களை அமைக்க முற்பட்டிருந்த போது குறித்த தொலைத்தொடர்பு கோபுரங்களால் சிறுவர் முதல் கற்பிணிப் பெண்கள் வரை பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படும் என்ற அச்ச நிலையில் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது.

இந்த நிலையில் தென்மராட்சியில் கோவில் காணி மற்றும் சனசமூக நிலையத்துக்கு சொந்தமான காணிகளில் குறித்த கோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டு தொலைத்தொடர்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளமை தென்மராட்சி மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.