ஆச்சரிய தகவல் - இன்னும் 20 ஆண்டுகளில் பிறக்கும் பெண் பிள்ளைகள் குறைந்தது 100 வயது வரையில் வாழ்வார்கள்.

Prasu
2 years ago
ஆச்சரிய தகவல் - இன்னும் 20 ஆண்டுகளில் பிறக்கும் பெண் பிள்ளைகள் குறைந்தது 100 வயது வரையில் வாழ்வார்கள்.

இன்னும் 20 ஆண்டுகளில் பிரித்தானியாவில் பிறக்கும் கால் பகுதி பெண் பிள்ளைகள் குறைந்தது 100 வயது வரையில் வாழ்வார்கள் என புதிய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

பொதுவாக 100 வயதைத் தொடும் பிரித்தானியர் எவருக்கும் ராணியாரிடம் இருந்து பிறந்தநாள் வாழ்த்து அட்டை பெற முடியும். இந்த நடைமுறைக்கு பிரித்தானிய அரச குடும்பம் மாற்றத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகலாம் என புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதாவது தேசிய புள்ளியியல் அலுவலகம் (ONS) வெளியிட்டுள்ள கணிப்புகளின் அடிப்படையில், 2045ல் பிறக்கும் ஐந்தில் ஒரு ஆண் பிள்ளை(20.9%) குறைந்தது 100 வயது வரையில் வாழ்வார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.

அதே வேளை, நான்கில் ஒரு பெண் பிள்ளை(27%) 100 வயது வரையில் வாழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, 2020ல் பிறந்த 13.6% ஆண் பிள்ளைகள் 100 வயது வரையில் வாழ்வார்கள் எனவும் 19% பெண் பிள்ளைகளும் 100 வயதை கடப்பார்கள் என தெரிய வந்துள்ளது.

ஆனால், 2020ல் பிறந்த ஆண் பிள்ளைகளின் சராசரி ஆயுட்காலம் 87.3 ஆண்டுகள் மற்றும் பெண் பிள்ளைகளின் சராசரி ஆயுட்காலம் 90.2 ஆண்டுகள் எனவும் ONS கணித்துள்ளது.

இருப்பினும், தற்போது பிரித்தானியாவில் வாழும் மக்கள் முன்பு கணித்தபடி நீண்ட காலம் வாழ்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2020 ல் பிறந்த பெண் பிள்ளைகள் 2012ல் கணிக்கப்பட்டதை விட 4.8 ஆண்டுகள் முன்னதாகவும், ஆண் பிள்ளைகள் 4.5 ஆண்டுகளுக்கு முன்பும் இறப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தில் உள்ள மக்களின் ஆயுட்காலத்தை மேம்படுத்துவதற்கான வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அரசாங்கம் பாரிய சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்