ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம்: மின்சார நெருக்கடி தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்
அரசாங்கக் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் இன்று (07) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
இதில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார, நாட்டில் நிலவும் மின்சார நெருக்கடி தொடர்பில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் பயன்பாடு மற்றும் ஏற்றுமதி பொருளாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மின்வெட்டு ஏற்பட்டால்இ அதை முறையான முறையில் செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.
எதிர்காலத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
அமைச்சர்கள் மத்தியில் ஏன் இரு கருத்துக்கள் நிலவுகின்றன என்றும் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களும் கேட்டதாக அவர் கூறினார்.
கூட்டுப் பொறுப்பை ஆரம்பித்து நடைமுறைப்படுத்துமாறு அவர் அமைச்சரவை அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அக்கூட்டத்தில் அடுத்த வார பாராளுமன்ற வேலைத்திட்டங்கள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து பாராளுமன்ற குழு கவனம் செலுத்தியது.
நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டம் தொடர்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ விசேட விளக்கமளித்தார்.