ரஷ்யாவின் நார்டு ஸ்ட்ரீம் 2 ஏஜி பைப்லைன் நிர்வாகம் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

Keerthi
2 years ago
ரஷ்யாவின் நார்டு ஸ்ட்ரீம் 2 ஏஜி பைப்லைன் நிர்வாகம் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, உக்ரைன் எல்லையில் சுமார் 1.5 லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் எச்சரித்து வருகின்றன. 

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக ரஷ்யா நேற்று அங்கீகரித்தது. அந்நகரங்களில் படைகளை களமிறக்க அதிபர் புதின் உத்தரவிட்டதால், அந்தப் பகுதிகளில் ரஷ்யா தனது படைகளை நிலைநிறுத்தியது. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.  

போர் அச்சுறுத்தலால் உக்ரைனில் இருந்து தனது தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என உலக தலைவர்கள் எச்சரித்தனர். அதன்படி, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யா மீது நேற்று பொருளாதார தடைகளை அறிவித்தன. வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். 

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைவிதிப்பது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதேபோல், ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளும் ரஷ்ய நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தனிநபர்கள் மீது கடும்  பொருளாதார தடைகளை அறிவித்துள்ளன.

இந்நிலையில், ரஷ்யாவின் நார்டு ஸ்ட்ரீம் 2 ஏஜி பைப்லைன் நிர்வாகம் மீது பொருளாதார தடை விதித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார்.