உக்ரைனுக்கு மிக முக்கிய காலகட்டமாக அமையப்போகும் அடுத்த 24 மணி நேரங்கள்!

Mayoorikka
2 years ago
உக்ரைனுக்கு மிக முக்கிய காலகட்டமாக அமையப்போகும் அடுத்த 24 மணி நேரங்கள்!

அடுத்த 24 மணி நேரங்கள் உக்ரைனுக்கு மிக முக்கியமான காலகட்டமாக இருக்கும் என நம்புவதாக ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போரை எதிர்கொண்டு வரும் உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனுடன் தொலைபேசியில் பேசிய ஸெலென்ஸ்கி இதனைக் குறிப்பிட்டார்.

இந்தப் பேச்சின் போது உக்ரைனை பாதுகாப்பதில் வொலோதிமிர் ஸெலென்ஸ்கியின் தலைமையை பிரதமர் போரிஸ் ஜோன்சன் பாராட்டினார் என்று பிரிட்டன் அரசாங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பிரிட்டன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் தற்காப்பு உதவி உக்ரைனை சென்றடைவதை உறுதி செய்ய பிரிட்டன் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் எனவும் ஜோன்சன் உறுதியளித்தார். அத்துடன் இரு தலைவர்களும் நெருங்கிய தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர் எனவும் பிரிட்டன் அரசாங்க செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இதேவேளை, இந்த வார இறுதியில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 90%க்கும் அதிகமான உக்ரைனியர்கள், ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை ஆதரிப்பதாகக் கூறினர். இது கடந்த ஆண்டு டிசம்பரில் அவருக்கு இருந்த ஆதரவை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

சமூகவியல் குழுவொன்றால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி, 91% பேர் அவரை ஆதரித்தனர், 6% பேர் மட்டுமே அவரை ஆதரிக்கவில்லை மற்றும் 3% பேர் முடிவு செய்யவில்லை.

கிரிமியாவில் வசிப்பவர்கள் மற்றும் கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் உள்ளவர்கள் தவிர, உக்ரைன் முழுவதிலும் இருந்து சுமார் 2,000 பேரிடம் எழுமாற்றாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

ரஷ்ய தாக்குதலை உக்ரைன் முறியடிக்கும் வாய்ப்புகள் பற்றி கேட்டபோது, 70% பேர் அது சாத்தியம் என்று நம்புவதாகக் கூறினர்.

படையெடுப்பு தொடங்குவதற்கு சற்று முன்பு இருந்தே உக்ரேனிய ஆயுதப்படைகளுக்கான ஆதரவும் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளமையையும் கருத்துக்கணிப்பு முடிவு காட்டுகிறது