மாணவர்கள் மற்றும் ஆசிரியர், அதிபர்களின் போக்குவரத்து பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வேண்டுகோள்!

Reha
2 years ago
மாணவர்கள் மற்றும் ஆசிரியர், அதிபர்களின் போக்குவரத்து பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வேண்டுகோள்!

நாளை முதல் பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ள நிலையில் மாணவர்களின் போக்குவரத்து தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அந்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நாளைய தினம் பாடசாலைகளுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டார்.

இந்தநிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர், அதிபர்களின் போக்குவரத்து பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாளை முதல் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மீண்டும் மாணவர்களை குழுக்களாக பாடசாலைக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, 20 மாணவர்களை உள்ளடக்கிய வகுப்புகள் தினமும் நடத்தப்பட வேண்டும் என்றும், 21 முதல் 40 வரையில் மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட வகுப்புகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, வெவ்வேறு வாரங்களில் தனித்தனியாக அழைக்கப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், 40 மாணவர்களுக்கு மேல் உள்ள வகுப்புகளை 3 சம பிரிவுகளாக பிரித்து கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.