300 வருடங்கள் பழமையான கடற்கன்னி வடிவிலான மம்மி கண்டுபிடிப்பு

Keerthi
2 years ago
300 வருடங்கள் பழமையான கடற்கன்னி வடிவிலான மம்மி கண்டுபிடிப்பு

300 வருடங்கள் பழமையான கடற்கன்னி வடிவிலான மம்மி, ஜப்பானின் பசிபிக் கடலிலுள்ள சிகோகு என்ற தீவின் அருகே கிடைத்திருக்கிறது.

தற்போது அதை ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் அச்சிலையின் அம்சங்களால் குழப்பமடைந்திருக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

12 இன்ச் மட்டுமே நீளமுள்ள அந்த மம்மி, 1736 - 1741 ஆண்டுக்குட்பட்ட காலகட்டத்தில் ஜப்பானின் சிகோகு பகுதியில் வாழ்ந்த உயிரினத்தினுடையது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். தற்போது கைப்பற்றபோது, அசாகுசி நகரத்திலுள்ள கோயிலொன்றில் அது இருந்திருக்கிறது. ஜப்பானின் `அசாகி ஷிம்புன்' என்ற செய்தித்தாள் அளித்திருக்கும் தகவலின்படி, 'கைப்பற்றப்பட்டுள்ள மம்மி `பசிபிக் கடலில் மீனவர்கள் மீன் பிடிக்கையில் கிடைத்தது' என்ற கடிதத்துடன் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. அந்த மம்மியை கைப்பற்றிய மீனவர்கள், அதை தங்கள் வீடுகளுக்கு கொண்டு வந்து, பின்னர் அதை கோயிலொன்றில் வைத்திருக்கின்றனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மம்மிக்கு, கூர்மையான பற்கள் - சற்று விகாரமான முகம் - இரண்டு கைகள் - தலையில் முடி - புருவமுடன் கண்கள் ஆகியவை இருந்திருக்கின்றன. இப்படியாக அதன் மேற்பகுதி மனிதர்களுக்கு இருக்கும் பகுதி போல உள்ளது. அதேநேரம் கீழ்ப்பகுதி மீன்களுக்கு உள்ளது போல உள்ளது. குறிப்பாக கீழ்ப்பகுதியில் மீன்களைப்போல செதில்கள் மற்றும் வால் போன்ற குறுகலான முனை உள்ளது. இப்படியாக நம் ஊரில் சொல்லப்படும் கடற்கன்னியின் அம்சங்களுடன் இருக்கும் அந்த மம்மியின் முழு பின்னணியை அறிய குராஷிகி பல்கலைகழக விஞ்ஞானிகள் சி.டி. ஸ்கேனிங் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 ஒகாயாமா நாட்டுப்புறக் கழகத்தினை சேர்ந்த ஹிரோஷி கினோஷிதா, 'ஜப்பானிய கடற்கன்னிகள், நெடுங்காலம் அழியாத்தன்மை கொண்டவை. அதனாலேயே கடற்கன்னிகளின் இறைச்சியை சாப்பிடுபவர்களுக்கு, இறப்பே இல்லையென்றெல்லாம் சொல்லப்படுவதற்கு இதுதான் காரணம்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.