சர்வ கட்சி மாநாட்டில் ரணிலிடம் மன்னிப்புக் கோரிய கோட்டபாய! நடந்தது என்ன?

Mayoorikka
2 years ago
சர்வ கட்சி மாநாட்டில்  ரணிலிடம் மன்னிப்புக் கோரிய கோட்டபாய! நடந்தது என்ன?

பெரும்பாலான கட்சிகள் நிராகரித்த சூழ்நிலையில், நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துக்கொள்வதற்காகவே தான் சர்வகட்சி மாநாட்டிற்கு சமூகமளித்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

நாடு தற்போது எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் பற்றி ஆராயவே நாம் இங்கு வந்தோம். மாறாக கட்சி அரசியலை முன்னெடுப்பதற்காக அல்ல. எனினும், குறுகிய அரசியல் நோக்கில், தற்போதைய நிலைமைக்கு கடந்த அரசுதான் பொறுப்பு என மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிடுகின்றார்.

அதற்கு என்னாலும் பதில் வழங்க முயும். பிறகு அவர் கருத்து வெளியிடுவார். அதற்கு நான் பதில் வழங்குவேன். அப்படியானால் இந்த பிரச்சினையை பற்றி மட்டும்தான் பேச வேண்டியிருக்கும். இறுதியில் விஜய மன்னன் இங்கு வந்திருக்காவிட்டால் பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்ற முடிவுக்கும் வரக்கூடும். அதேபோல எதிரணிகளை தோற்கடிக்க நாம் இங்குவரவில்லை.

எதிர்காலத்தில் அவர்களையும் இணைத்தக்கொள்ளும் நோக்கில்தான் வந்துள்ளோம் என ரணில் குறிப்பிட்டுள்ளார்.நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்கு கடந்த அரசாங்கமே காரணம் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மாநாடு ஆரம்பத்திலேயே  குற்றஞ்சுமத்தியதாக கூறிய ரணில் விக்ரமசிங்க, அதற்கு தான் முன்னரே உரிய பதிலை வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, குறுக்கிட்டு பேசிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ,  மனம் வேதனைப்படும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் தான் மன்னிப்பு கோருவதாக குறிப்பிட்டார்.