தற்போதைய அமைச்சரவையின் அமைப்பு அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவு!!

Prabha Praneetha
2 years ago
தற்போதைய அமைச்சரவையின் அமைப்பு அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்யுமாறு  உத்தரவு!!

தற்போதைய அமைச்சரவையின் அமைப்பு அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அட்டர்னி ஜெனரலுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி அமைச்சரவையை நியமித்த விதம் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்கக் கோரி இன்று அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்ட போதே அது இடம்பெற்றுள்ளது.

முர்து பெர்னாண்டோ, காமினி அமரசேகர மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் இந்திக்க தேவமுனி டி சில்வாவுக்கு இந்த உத்தரவை பிறப்பித்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தர்ஷன வெரதுவ, அமைச்சரவையை ஆட்சேபித்துள்ள வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அமைச்சரவையில் ஜனாதிபதி பல திருத்தங்களைச் செய்துள்ளார்.

எனவே, புதிய திருத்தங்கள் உள்ளிட்ட திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரினார்.

இதன்படி, திருத்தப்பட்ட மனுவை மே 04 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு மனுதாரர்களுக்கு உத்தரவிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு, எதிர்மனுதாரர்கள் தமது ஆட்சேபனைகளை மே 11 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.

இந்த மனுவை எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதி அழைப்பதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக  நீதிமன்ற செய்தியாளர் ஒருவர்  தெரிவித்தார்.

தொழில் வல்லுநர்களின் தேசிய முன்னணியின் செயலாளர் பொறியியலாளர் கபில ரேணுகா பெரேரா மனுவை சமர்ப்பித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் சட்டமா அதிபர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சரவை உறுப்பினர்கள், அனைத்து இராஜாங்க அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.