தமிழகத்திலிருந்து நிவாரண பொருட்கள் 16இல் இலங்கை வருகிறது.. முதற்கட்டமாக அரிசி மற்றும் மருந்து வகைகள்

#SriLanka #Tamil Nadu #Food
தமிழகத்திலிருந்து நிவாரண பொருட்கள் 16இல் இலங்கை வருகிறது.. முதற்கட்டமாக அரிசி மற்றும் மருந்து வகைகள்

இலங்கைக்கு தமிழகத்திலிருந்து எதிர்வரும் 16ஆம் திகதி அரிசி மற்றும் மருந்து வகைகள் அனுப்பப்படவுள்ளன. தற்போது இவை பொதி செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை மக்களுக்கு மனிதாபிமான உதவியாக தமிழகத்திலிருந்து அனுப்பப்படவுள்ள நிவாரணப் பொருட்கள் முதல் கட்டமாக எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை தமிழகத்தில் இருந்து இலங்கை வருகின்றன. சென்னை துறைமுகத்திலிருந்து கப்பலில் அரிசி மற்றும் மருந்து வகைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இலங்கையில் தவறான பொருளாதார கொள்கை முடிவுகளால் கடுமையான பொருளாதா சீரழிவு ஏற்பட்டுள்ளது. இங்கு அத்தியாவசியப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. இதனால் பொதுமக்கள் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுத்து உதவுவதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் வந்தார். இலங்கை மக்களுக்கு ரூ. 80 கோடி மதிப்புள்ள 40 தொன் அரிசி, ரூ. 28 கோடி மதிப்புள்ள 137 வகை மருந்துகள், ரூ. 15 கோடி மதிப்புள்ள 500 தொன் பால் மா ஆகியவை வழங்கப்படுமென்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு மத்திய அரசும் இதற்கு அனுமதி வழங்கியது.

இதையடுத்து இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க 04 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் எஸ்.பிரபாகர், ஆவின் நிர்வாக இயக்குநர் சுப்பையன், மருத்துவப் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் தீபக் ஜோசப் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழு இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப்பொருட்களை அனுப்பும் பணியை மேற்கொண்டு வருகிறது. தற்போது நிவாரணப் பொருட்களை பொதி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பார்சலில் 'தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன்' என்று அச்சிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 16 ஆம் திகதி (திங்கட்கிழமை) தமிழகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் இலங்கை வருகிறது.

முதல் கட்டமாக 10 ஆயிரம் தொன் அரிசி மற்றும் பால் மா, மருந்து வகைகள் உள்ளன. அதன் பின்னர் மீண்டும் எதிர்வரும் 22 ஆம் திகதி 02ஆவது கட்டமாக இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.