துறைமுக ஊழியர்களுக்கு 5,850 மில்லியன் ரூபா மேலதிக கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாக கோப் குழுவில் நிரூபணம்!

இலங்கை துறைமுக அதிகார சபையில், கடந்த ஆண்டுக்காக 5,850 மில்லியன் ரூபா மேலதிக கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் குழுவில் தெரியவந்துள்ளது.
மிகை ஊழியர்கள் இருந்த துறைகளின் ஊழியர்களுக்காக மாத்திரம், கடந்த ஆண்டு 1,173 மில்லியன் ரூபா மேலதிக கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளது.
தகைமையற்ற சுமார் 1,500 பேர் ஆட்சேர்க்கப்பட்டுள்ளதுடன், குறித்த தொழில் தகைமையுடையவர்களின் கடமைக்காக, கூடுதல் மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, மாதத்திற்கு 400 மணித்தியால மேலதிக கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளும் ஊழியர்களும் உள்ளதாக கோப் குழுவில் தகவல் வெளிப்பட்டுள்ளது.
அதேநேரம், 2016 ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை, துறைமுக அதிகார சபையில், 69,686 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டப்பட்டுள்ள நிலையில், திறைசேரிக்கு 600 மில்லியன் ரூபா மட்டுமே வழங்கப்பட்டுள்ளமையும் கோப் குழுவில் கண்டறியப்பட்டுள்ளது.
துறைமுக சட்டத்திற்கமைய, 8 சதவீத இலாபம் திறைசேரிக்கு வழங்கப்பட வேண்டும் என்பதால், அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழுவின் தலைவர், பேராசிரியர் சரித்த ஹேரத் இதன்போது பரிந்துரைத்ததாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



