அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் ஒப்பந்தத்தை விமர்சித்த வடகொரியா

ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளின் சமீபத்திய ஒப்பந்தத்தை வடகொரியா விமர்சனம் செய்துள்ளது.
இதுகுறித்து வடகொரிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியதாவது, “ஆசிய பிராந்தியத்தில் “நேட்டோ” போன்றதொரு ராணுவக் கூட்டணியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்க திட்டம் தீட்டியுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறையாக ஒப்பந்தம் அமைந்துள்ளது.
வடகொரியாவிடமிருந்து அச்சுறுத்தல் என்ற வதந்தியை அமெரிக்கா தொடர்ந்து பரப்புகிறது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ராணுவ ஆதிக்கத்தை அடைவதற்கான ஒரு சாக்குப்போக்கு காரணமாக, அமெரிக்கா வட கொரியாவை குற்றம் சாட்டுகிறது.
இருப்பினும் இந்த சூழ்நிலையில், பாதுகாப்பு மோசமடைவதைத் தீவிரமாகச் சமாளிக்க, எங்கள் நாட்டின் பாதுகாப்பைக் கட்டியெழுப்புவதற்கு அவசரமாக செயல்படுகிறோம்” என்று வடகொரிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
கடந்த வாரம் நேட்டோ உச்சிமாநாட்டின் போது, அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் தலைவர்கள் சந்தித்துள்ளனர். வட கொரியாவிற்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கான கூடுதல் வழிமுறைகளை ஆராய ஒப்புக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.




