மூன்று இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை டிப்பரில் கடத்திச் சென்று கடுமையாக தாக்குதல் நடத்திய சம்பவம் பதிவு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கோம்பாவில் ,வள்ளிபுனம், தேரவில் பகுதிகளைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை டிப்பரில் கடத்திச் சென்று கடுமையாக தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த வாரத்தில் இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது கல்லாற்று பகுதியினைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை தாக்கியதாக தெரிவிக்கப்படும் மூன்று இளைஞர்களையே இவ்வாறு டிப்பரில் கடத்தி சென்றுள்ளனர்.
இளைஞர்களை கடத்திச் சென்று கடுமையாக தாக்குதல்
05.07.2022 நேற்று மாலை இளைஞர் குழு ஒன்று டிப்பரில் மூன்று இளைஞர்களையும் கடத்திச் சென்ற வேளை விசுவடு பகுதியில் ஒழுங்கை ஒன்றில் பயணித்த டிப்பரின் சில்லு பாலத்தில் மோதி ரயர் வெடித்துள்ளது.
இந்தச் சம்பவத்தினை தொடர்ந்து டிப்பர் வாகனத்தை அந்த இடத்தில் விட்டுவிட்டு இளைஞர்களை கடத்தி சென்றுள்ளனர்.
புதுக்குடியிருப்பு காவல்துறையினர் சென்ற வேளை, கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், டிப்பர் வாகனத்தினை கைவிட்டு தப்பிச் சென்ற நிலையில், கடத்தப்பட்ட மூன்று இளைஞர்களையும் மீட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.
டிப்பர் வாகனம் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
வாகனத்தின் உரிமையாளர் தொடர்பிலும், வாகனம் ஓட்டியவர்கள் தொடர்பிலும், புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.