எரிமலையின் உச்சியில் செல்ஃபி எடுத்த சுற்றுலா பயணிக்கு நேர்ந்த விபரீதம்

#world_news
Kobi
2 years ago
எரிமலையின் உச்சியில் செல்ஃபி எடுத்த சுற்றுலா பயணிக்கு நேர்ந்த விபரீதம்

அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர் வெசுவியஸ் பள்ளத்தாக்கில் செல்பி எடுக்க முயன்று தடுமாறி விழுந்தார். . இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 23 வயதான இந்த நபர் , தனது குடும்ப உறுப்பினர்கள் மூவருடன், தெற்கு இத்தாலிய நகரமான நேபிள்ஸில் இருக்கும் உயரமான எரிமலையின் உச்சிக்கு சென்றுள்ளனர். இந்த எரிமலையின் உயரம் சுமார் 1,281 மீட்டர் இருக்கும் என கூறுகின்றனர்.

சுற்றுலாப் பயணி எரிமலையின் உச்சியில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த போது அவரது செல்போன் கையிலிருந்து நழுவி எரிமலையின் வாயில் விழுந்ததாகவும், அவர் செல்போனை எடுக்க எண்ணி முயற்சி செய்ததால் அவர் தனது சமநிலையை இழந்து பள்ளத்தில் விழுந்ததாகவும் NBC தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பல மீட்டர்கள் தூரம் பள்ளத்தில் இறங்கியதால் அவரின் கைகளிலும் முதுகிலும் அதிகமான காயங்களும் உடலின் மற்ற இடங்களில் சிறு சிறு காயங்களும் ஏற்பட்டது.

வழிகாட்டிகளுக்கான தளமான Presidio Permanente Vesuvio இன் தலைவரான Paolo Cappelli, சுற்றுலாப் பயணிகள் தடை செய்யப்பட்டப்பாதை வழியாக சென்றதாகக் கூறினார். மேலும் கப்பெல்லி, அந்த குடும்பம் ஒட்டாவியானோ நகரத்திலிருந்து வெசுவியஸின் உச்சியை அடைந்ததாகவும், அவர்கள் தடைசெய்யப்பட்ட பாதை வழியாகவே எரிமலையின் உச்சியை அடைந்ததாகவும் கூறினார். சுற்றுலாப் பயணிகள் அனுமதி கிடையாது என எழுதப்பட்ட பலகைகளை பொருட்படுத்தாமல் மற்றொரு பாதையில் சென்றதாக அவர் கூறினார்.