போராட்ட களத்தில் முன்னின்று செயற்பட்ட அருட்தந்தை பிணையில் விடுதலை!

Kanimoli
2 years ago
போராட்ட களத்தில் முன்னின்று செயற்பட்ட அருட்தந்தை பிணையில் விடுதலை!

கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகிய அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நாட்டில் கடந்த மாதங்களில் இடம்பெற்ற போராட்டங்களில் ஈடுபட்டு வந்தவர்களை காவல்துறையினர் தற்போது கைதுசெய்து வருகின்றனர்.

அதேவேளை,போராட்ட களத்தில் முன்னின்று செயற்பட்ட அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தாம் கைது செய்யப்படுவதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி கடந்தவாரம் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, ​​அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

எனினும், இந்தக் கோரிக்கையை நிராகரித்த கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, அருட்தந்தை ஜீவந்த பீரிஸை தலா 5 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

அருட்தந்தை ஜீவந்த பீரிஸின் வெளிநாட்டு பயணத்திற்கு தடை விதித்து உத்தரவிட்ட நீதவான், நாளை காவல்துறையினரிடம் சென்று வாக்குமூலம் வழங்குமாறும் உத்தரவிட்டார்.

மேலும், குறித்த முறைப்பாட்டை எதிர்வரும் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.