பேர்மிங்காமில் காணாமல்போனவர்களுக்கு எதிராக விளையாட்டு அமைச்சின் கடுமையான நடவடிக்கைகள்

Prathees
2 years ago
பேர்மிங்காமில் காணாமல்போனவர்களுக்கு எதிராக  விளையாட்டு அமைச்சின் கடுமையான நடவடிக்கைகள்

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் பின்னர் இலங்கைக்கு வராத அதிகாரி மற்றும் ஒன்பது வீரர்கள் தொடர்பில் விளையாட்டு அமைச்சு சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தும் என விளையாட்டு அமைச்சின் செயலாளர் கலாநிதி அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் பேர்மிங்காமில் நடைபெற்ற 22ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 8ஆம் திகதி நிறைவடைந்ததாகவும் மேற்படி சிலரைத் தவிர ஏனைய அனைவரும் தற்போது இலங்கைக்கு வந்துள்ளதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

விளையாட்டில் பங்கேற்ற வீரர்கள் மற்றும் அதிகாரிகள் இங்கிலாந்தில் தங்குவதற்கு 6 மாதங்கள் விசா கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் விளையாட்டுப் போட்டிகள் முடிந்துவிட்டதால், சென்ற அனைவரும் திரும்பி வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

14 நிகழ்வுகளில் 161 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டதாகவும், 10 பேரைத் தவிர மற்ற அனைவரும் வந்ததாகவும் செயலாளர் தெரிவித்தார்.

காணாமல் போன வீரர்கள், விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் அதிகாரி தொடர்பிலான அறிக்கையை இங்கிலாந்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ஊடாக அந்நாட்டு குடிவரவு அதிகாரிகளுக்கு வழங்கி அவர்களை இலங்கைக்கு நாடு கடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இவர்களை இலங்கைக்கு நாடு கடத்தினால் அவர்களுக்கு எதிராக இந்த நாட்டின் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் எனவும், இனிமேல் வேறு நாடுகளுக்கு விளையாட்டு விளையாட அனுப்பப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையை தவிர ஏனைய ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றிய விளையாட்டு வீரர்கள் குழுவும் பேர்மிங்காமில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.