குடைசாய்ந்த பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து

Kanimoli
2 years ago
குடைசாய்ந்த பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து

நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பாரிய விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நுவரெலியா பகுதியிலிருந்து லபுக்கலை பகுதியை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் லபுக்கலை மேற்பிரிவு பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பயணிகளை ஏற்றிக் கொண்டு லபுக்கலை பகுதி நோக்கி நேற்று மாலை பயணிக்கும் போதே பிரதான வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து ஏற்படும் போது பேருந்தில் 30ற்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளதாகவும், விபத்தின் போது, 4 பேர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த 4 பேரும், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு காயமடைந்தவர்களில் சிறுவர்களும் அடங்குகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விபத்து தொடர்பில் காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது, பேருந்து சாரதிக்கு வேக கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் இந்த விபத்து நேர்ந்ததாக  தெரியவந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.