கிரிமியாவில் உள்ள ரஷ்ய ராணுவ வெடிமருந்துக் கிடங்கில் நேற்று பயங்கர வெடிவிபத்து-2000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

Prasu
2 years ago
கிரிமியாவில் உள்ள ரஷ்ய ராணுவ வெடிமருந்துக் கிடங்கில் நேற்று பயங்கர வெடிவிபத்து-2000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

ரஷ்யாவுடன் இணைந்த கிரிமியாவில் உள்ள ராணுவ வெடிமருந்துக் கிடங்கில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. ராணுவ வெடிமருந்துக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் மின் உற்பத்தி நிலையம், மின் கம்பிகள், ரெயில் பாதைகள் மற்றும் சில அடுக்குமாடி கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதனை அடுத்து, அங்கிருந்து 2000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தினால் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னதாக கடந்த வாரம் 9 ஆம் தேதியன்று கிரிமியாவில் உள்ள ரஷ்ய ராணுவ விமானதளத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. 

உக்ரைனின் தெற்கில் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்த, கிரிமியாவில் உள்ள சாகி ராணுவ விமான தளம் ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அங்கு நிலைகொண்டிருந்த ரஷ்ய போர் விமானங்கள் இந்த பயங்கர விபத்தில் தீக்கிரையாகின. அங்கு வெடிகுண்டுகள் வெடித்ததால் ராணுவ விமான தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், அங்கிருந்த போர் விமானங்களுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் இன்று கிரிமியாவில் உள்ள உக்ரைனுக்கு விசுவாசமான ஆயுதக் குழுக்கள் இராணுவ தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் முன் வைக்கப்படுகின்றது. 

ரஷ்யா சில நாசகாரர்கள் இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டுகிறது. மேலும் இந்த தாக்குதலில், உக்ரைன் தலையீடு இருப்பதாக ஊகிக்கப்படுகின்றது. 

இந்த விபத்தில் வடக்கு கிரிமியாவில் உள்ள மின் இணைப்புகள், மின்சார துணை நிலையம், ரெயில்வே உள்கட்டமைப்பு மற்றும் சில வீடுகளும் சேதமடைந்திருப்பதாக ரஷ்ய தரப்பில் கூறப்பட்டுள்ளது.