காலி முகத்திடல் போராட்டத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கான நட்டஈட்டை போராட்டக்காரர்களிடமிருந்து அறவிட முடிவு

Kanimoli
2 years ago
  காலி முகத்திடல் போராட்டத்தினால்  ஏற்பட்ட சேதங்களுக்கான  நட்டஈட்டை போராட்டக்காரர்களிடமிருந்து அறவிட முடிவு

  காலி முகத்திடல் போராட்டத்தினால் அங்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான நட்டஈட்டை, போராட்டக்காரர்களிடமிருந்து அறவிட தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு உரிமை காணப்படுகின்றது என கூறிய தரப்பிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

அரச சொத்துக்களை சேதப்படுத்தவோ, தம்வசப்படுத்திக் கொள்ளவோ உரிமை கிடையாது

அத்துடன், அவர்களிடமிருந்து முழுமையான நட்டஈட்டை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். நகர அபிவிருத்தி அமைச்சுக்கு கீழ் காணப்படும் காலி முகத்திடலில் இருந்து, நாட்டில் காணப்படுகின்ற சட்டத்திற்கு அமைய போராட்டக்காரர்கள் அகற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் எந்தவொரு நபருக்கும் அரச சொத்துக்களை சேதப்படுத்தவோ, தம்வசப்படுத்திக் கொள்ளவோ உரிமை கிடையாது என அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு நட்டஈடு பெற்றுக்கொள்ளப்படாத பட்சத்தில், எதிர்வரும் காலங்களில் அமைச்சின் அதிகாரிகளே பாரிய சிரமங்களை எதிர்நோக்க வேண்டிவரும் என சுட்டிக்காட்டிய அவர், அவ்வாறான நிலைமையை எதிர்நோக்க தமது அமைச்சின் அதிகாரிகளுக்கு இடமளிக்கப்படாது எனவும் குறிப்பிட்டார்