தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் மறைவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Mayoorikka
2 years ago
தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் மறைவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இரங்கல்

பிரபல பேச்சாளரும் தமிழகத்தின் முதுபெரும் தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவருமான தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் மறைவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது இரங்கல் செய்தி வருமாறு:

தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள் மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன்.

 
கடந்த ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கிய காமராசர் கதிர் விருது பெற்ற பெரியவர் நெல்லை கண்ணன் அவர்கள் விழா மேடையிலேயே என்னிடம் வாஞ்சையொழுக அன்பு பாராட்டி பேசியதை இப்போதும் நினைத்து நெஞ்சம் நெகிழ்கிறேன்.

தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்களின் தமிழ்ப் பங்களிப்பை போற்றும் வகையில் 2021-ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சி துறையின் இங்கோவடிகள் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இலக்கிய அறிவில் செறிந்த பழகுதற்கினிய நெல்லை கண்ணன் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், தமிழுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.