பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் தீ; மாணவர்களின் புத்தகங்களும் எரிந்து நாசம்

Prathees
2 years ago
பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் தீ; மாணவர்களின் புத்தகங்களும் எரிந்து நாசம்

பேராதனை பல்கலைக்கழகத்துக்கு அருகில் ஹிந்தகல வீதியில் நடத்திச் செல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கான தனியார் விடுதிக்குள் ஏற்பட்ட தீ காரணமாக, அந்த விடுதிக்கும் மாணவர்களின் புத்தகங்கள் உள்ளிட்ட உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது என முறைப்பாடு கிடைத்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் (19) இரவு குறித்த விடுதிக்குள் 20- 23 மாணவர்கள் இருந்துள்ளதுடன், இத் தீ பரவலின் போது, எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மாணவர்களின் கற்றல் உபகரணங்கள், மடி கணினிகள், ஆடைகள் உள்ளிட்டவை தீயில் எரிந்து கருகியுள்ளன.

பேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்விடுதியில் தங்கியுள்ளனர் என்றும் இத்தீயால் தமது உடைமைகளை இழந்த மாணவர்கள் 10 பேருக்கு உப்பீடாதிபதி நிதியத்திலிருந்து தலா 7500 ரூபாய் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என தெரிவித்துள்ள பேராதனை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.