பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி வடமராட்சியில் கையெழுத்து திரட்டல்!
Mayoorikka
2 years ago

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி, நாடளாவிய ரீதியில் ஊர்திவழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் மூன்றாவது நாளாக இன்றும் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்று காலை வடமராட்சியில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இடம்பெற்றது.
வல்லை முனியப்பர் கோவில் முன்பாக தேங்காய் உடைத்து, ஊர்திவழி கையெழுத்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய வாலிபர் முன்னணியும் சர்வஜன நீதி அமைப்பும் முன்னெடுத்த கையெழுத்து திரட்டும் பிரச்சார நடவடிக்கையின் மூன்றாவது நாள், வடமராட்சி பகுதிகளில் மாகாணசபை முன்னாள் உறுப்பினர் எஸ்.சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



