சிகிச்சைக்கு வந்த 15 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - சரணடைந்த வைத்தியர் கைது

#SriLanka #doctor #Arrest
Prasu
2 years ago
சிகிச்சைக்கு வந்த 15 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - சரணடைந்த வைத்தியர் கைது

காலி - கராபிட்டிய வைத்தியசாலையில் கதிரியக்க பிரிவில் வைத்து 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில்  தேடப்பட்டு வந்த வைத்தியர் நேற்று (12) காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சட்டத்தரணி ஒருவர் ஊடாக அவர் காலி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இந்நிலையில் குறித்த வைத்தியர் காலி மேலதிக நீதிவான் லக்மினி விதானகமகே முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரை 3 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் நீதிவான் விடுவித்துள்ளார்.

குறித்த பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில்   சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை மன்றில் முன் வைக்கப்பட்டிருக்காமை உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தி பிணையளித்துள்ள நீதிவான் வழக்கை எதிர்வரும் 14 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுப்பதாக அறிவித்துள்ளார்.

இந்த பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில்  இரு வேறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கராபிட்டிய வைத்தியசாலை ஊடாகவும், காலி பொலிஸ் நிலையம் ஊடாகவும் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த சிறுமி சிகிச்சைப் பெற்ற சிகிச்சை அறைக்கு பொறுப்பான  விஷேட வைத்திய நிபுணர் தனக்களித்த முறைப்பாட்டுக்கு அமைய,  நிறுவன மட்டத்தில் விசாரணைகளை ஆரம்பித்ததாக கராபிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர்  எஸ்.பி.யூ. எம். ரங்க தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமி, தனது தாயுடன் வந்து கொடுத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில சேனாதிபதி  சில்வா தெரிவித்தார்.

கடந்த 7 ஆம் திகதி குறித்த சிறுமி சுகயீனம் காரணமாக  காலி - கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் அவருக்கு 8 ஆம் திகதி வயிற்றுப் பகுதியில் ஸ்கேன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்திலேயே பாலியல் துஷ்பிரயோகம் நடந்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஸ்கேன் பரிசோதனையின் பின்னர், சிகிச்சைப் பெற்று வந்த சிகிச்சை அறைக்கே சிறுமி மீள அனுப்பட்டுள்ள நிலையில், அங்கு வைத்து தன்னை பார்வையிட வந்த தாயிடம் சிறுமி தனக்கு நடந்ததை கூறியுள்ளார். 

இந்நிலையிலேயே தாயார், குறித்த சிகிச்சை அறைக்கு பொறுப்பான விஷேட வைத்திய நிபுணருக்கு அது குறித்து அறிவித்துவிட்டு, காலி பொலிஸ் நிலையத்தில் சிறுமியுடன் சென்று முறைப்பாடளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.