மதுபானம் விலை ஏறியதனால் ஓடிகலோன் குடித்த குடும்பஸ்தர் மரணம்

Mayoorikka
1 year ago
மதுபானம் விலை ஏறியதனால் ஓடிகலோன் குடித்த குடும்பஸ்தர் மரணம்

மதுபானம் விலை ஏறியதனால், அதற்கு பதிலாக ஓடிகலோனை குடித்து வந்த 54 வயதுடைய நபரொருவர் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு உள்ளே இந்த சம்பவம் நேற்று (25) இடம் பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம், புகையிரத நிலைய வீதியை வசிப்பிடமாகக் கொண்ட, மார்க்கண்டு திருக்குமரன் (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதுடன் மட்டுமல்லாது, மதுபான போத்தல்களின் விலையும் அதிகரித்துள்ளது. மதுபானம் வாங்க முடியாத நிலையில், இவர் தொடர்ச்சியாக ஓடிகலோன் குடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய மதியம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.