காதல் கடித விவகாரம்: இராஜாங்க அமைச்சரின் மகனால் தாக்கப்பட்ட இரு மாணவர்கள்

Mayoorikka
1 year ago
காதல் கடித விவகாரம்:  இராஜாங்க அமைச்சரின் மகனால் தாக்கப்பட்ட இரு மாணவர்கள்

இராஜாங்க அமைச்சர் ஒருவரின் மகன் எனக் கூறிக்கொண்டு, டிபென்டர் வாகனத்தில் பாதுகாப்புக்கு மத்தியில் வருகைத் தந்த இளைஞர் ஒருவர் உள்ளிட்ட குழுவினர், கிரிபத்கொட நகரில் பிரபல பிரத்தியேக கல்வி நிலையம் முன்பாக வைத்து, பாடசாலை மாணவர்கள் இருவரைத்  கண்மூடித் தனமாக தாக்கியுள்ளனர்.

இவ்வாறு தாக்குதலை முன்னெடுத்த நபர்களுக்கு மேலதிகமாக கறுப்பு நிற ஆடை அணிந்த குழுவினரும் ​​டிபென்டனர் வாகனத்தில் வருகைத் தந்து சம்பவ இடத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வருகைத் தந்தவர்களின் வாகனம் வர்த்தக அமைச்சின் செயலாளரின் கீழ் பதிவு செய்யப்பட்ட வாகனம் என்றும் மோட்டார் வாகனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்போது இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் 20 வயது மகனும் சம்பவ இடத்தில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு காதல் தொடர்பே காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இராஜாங்க அமைச்சரின் மகனின் நண்பரின் காதலிக்கு, தாக்குதலுக்கு இலக்கான மாணவர்கள் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளமையே இச்சம்பவத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

இத்தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் இருவரும் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர் என்றும் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் மகன் உள்ளிட்டவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.