அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய குடும்பத்தினர் படுகொலை... பழத்தோட்டத்தில் மீட்கப்பட்ட சடலங்கள்

Prasu
1 year ago
அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய குடும்பத்தினர் படுகொலை... பழத்தோட்டத்தில் மீட்கப்பட்ட சடலங்கள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வசித்து வந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங் (36), இவரது மனைவி ஜஸ்லீன் கவுர், இவர்களின் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி மற்றும் உறவினர் அமன்தீப் சிங் (39) ஆகியோர் கடத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

கடந்த திங்கட்கிழமை மெர்சிட் கவுன்டியில் உள்ள ஒரு வணிக நிறுவனத்தில் வைத்து கடத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல் கும்பலை தேடிவந்தனர். 

இந்நிலையில், காணாமல் போன 4 பேரின் சடலமும் இண்டியானா சாலை மற்றும் ஹட்ச்ஹின்சன் சாலையை ஒட்டிய பழத்தோட்டத்தில் மீட்கப்பட்டுள்ளது. 

தொழிலாளி ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டிருக்கிறது. இந்தக் கடத்தல் மற்றும் கொலை தொடர்பாக ஜீஸஸ் மேனுவல் சால்கடோ (வயது 48) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

அந்த நபர் போலீஸ் காவலில் இருந்தபோது தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொலை செய்யப்பட்டவர்கள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட சீக்கிய மதத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.