முகத்துவாரம் பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் தொடர்பில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தகவல்

Kanimoli
1 year ago
முகத்துவாரம் பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் தொடர்பில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தகவல்

முகத்துவாரம் - கஜிமாவத்தை பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் தொடர்பில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

தீப்பரவல் ஏற்பட்ட பகுதியில் மீள வீடுகள் கிடைக்கப்பெற வேண்டிய 214 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கஜிமாவத்தை தீப்பரவல் தொடர்பில் அந்த அமைச்சின் செயலாளர் தயாரித்துள்ள புதிய அறிக்கைக்கு அமைய இந்த தகவல் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நகர மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், குறித்த பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்படும் வரை தற்காலிக இடைநிலை தங்குமிடங்களை ஏற்படுத்துவதற்காக அந்த பகுதி நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அந்த அறிக்கையின்படி, நகர அபிவிருத்தி அதிகார சபையானது பின்னர் அடுக்குமாடி குடியிருப்புகளை நிர்மாணிப்பதற்கான காணிகளை விடுவிக்கும் போது இடம்பெயர்ந்த குடும்பங்களின் தற்காலிக குடியேற்றத்திற்காக கஜிமாவத்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, 275 குடும்பங்கள் கஜிமாவத்தை பகுதியில் குடியேறியுள்ளன. பின்னர் அந்த குடும்பங்களுக்கு கஜிமாவத்தையில் மாற்று வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

எனினும் அரசியல் தலையீடுகள் காரணமாக பல சந்தர்ப்பங்களில் குறித்த பகுதியிலேயே அந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.