நாட்டின் கடனை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் காலதாமதமின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் - கலாநிதி பிரியங்க துனுசிங்க

Kanimoli
1 year ago
நாட்டின் கடனை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் காலதாமதமின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் - கலாநிதி பிரியங்க துனுசிங்க

நாட்டின் கடனை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் காலதாமதமின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.

உலகில் ஏனைய 54 நாடுகள் கடன் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் அறிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் உலகளாவிய கடன் நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நிறைவு செய்வது இலங்கைக்கு நன்மை பயக்கும் என பிரியங்க துனுசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மேலும் தாமதமானால் இலங்கையில் வருமானம் குறைந்த மக்கள் பாரிய நெருக்கடிக்குள்ளாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடன் வழங்கும் நாடுகளின் நம்பிக்கையை பெற வேண்டிய நடவடிக்கை தாமதமின்றி உடனடியாக இலங்கை மேற்கொள்ள வேண்டும். இல்லை என்றால் நாடு சந்திக்க போகும் நெருக்கடி மிகவும் பெரியதாக காணப்படும் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, 22 கடன் வழங்கும் நாடுகளை உள்ளடக்கிய பரிஸ் கிளப், கடன் நெருக்கடிக்கு விரைவான தீர்வு காணும் இலங்கையின் முயற்சிகளுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஏனைய நாடுகளும் உடன்பட வேண்டும்.

பரிஸ் கிளப்பிற்குள் இலங்கைக்கு அதிக கடன் வழங்கும் நாடுகளுக்கு இந்திய மற்றும் சீனா போன்ற நாடுகள் உள்ளடங்கவில்லை. அவ்வாறான நாடுகளின் அனுமதி பெறுவது கட்டாயமாகும்.

இல்லை என்றால் நாடு மிகவும் ஆபத்தான நிலைக்குள்ளாகும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள சுட்டிக்காட்டியுள்ளார்.