இலங்கை மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் பெலாரஸ் அரசுடன் ஒப்பந்தம்!

Mayoorikka
1 year ago
இலங்கை மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் பெலாரஸ் அரசுடன் ஒப்பந்தம்!

இலங்கை மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்தில், பெலாரஸ் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு இலங்கை கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

பெலாரஸ் நாட்டிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. இலங்கையிலிருந்து அதிகளவான மாணவர்கள் பெலாரஸ் பல்கலைக்கழகங்களில் இணைந்து உயர்கல்வியைத் தொடர்வதாக பெலாரஸ் கல்வி அமைச்சர் அன்ட்ரே இவானெட்ஸிடம், அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 

சமகால கல்வி முறைகளுக்கு ஏற்றவாறு இலங்கையில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக பாடத்திட்டங்களை மேம்படுத்துவது தொடர்பான விடயங்களை அமைச்சர் பிரேமஜயந்த விளக்கினார். 

பெலாரஸ் நாட்டில் அதிகளவான இலங்கை மருத்துவ மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகவும் கல்வியமைச்சர் நினைவூட்டியதுடன், இம்மாணவர்களின் எதிர்கால நலன் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. 

அத்துடன், இலங்கையின் கல்விச் சீர்திருத்தங்களுக்கு தமது அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இதன்போது பெலாரஸ் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பெலாரஸ் மற்றும் இலங்கை கல்வி அமைச்சுக்களுக்கு இடையில் கைச்சாத்திடப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான வரைவு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.