யாழில் வேலை வாய்ப்புக்களை பூர்த்தி செய்ய மாபெரும் தொழில் சந்தை: மாவட்ட அரச அதிபர் தெரிவிப்பு!

Mayoorikka
1 year ago
யாழில் வேலை வாய்ப்புக்களை பூர்த்தி செய்ய மாபெரும் தொழில் சந்தை:  மாவட்ட அரச அதிபர் தெரிவிப்பு!

யாழ் மாவட்டத்தில் பல்வேறு வேலை வாய்ப்புக்களை பூர்த்தி செய்யக் கூடிய வகையில்,மாபெரும் தொழில் சந்தை நிகழ்வு நடைபெறவுள்ளதாக மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும் இணைந்து மாவட்ட செயலகத்தில், இம்மாதம் ஒக்டோபர் 22 ஆம் திகதி சனிக்கிழமையன்று மாபெரும் தொழிற்சந்தை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தில் சுமார் பத்தொன்பதாயிரத்து நூற்று நாற்பத்து ஏழு பேருக்கு மேற்பட்ட தொழில் தேடுபவர்கள் பதிவு செய்துள்ளனர்.அவர்களுக்கு இந்த வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதற்கும் அத்துடன் தொழிற்சந்தைக்குரிய தங்களுடைய கற்கை நெறிகளை பயில ஆர்வம் உள்ளவர்களுக்கு அந்த பயிற்சி நெறியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த தொழில் சந்தை நிகழ்வு நடைபெறுகிறது.

குறிப்பாக தனியார் உற்பத்தி நிறுவனங்கள், சந்தைப்படுத்தல் துறை ஹோட்டல் துறை கணக்கியல் துறை காப்புறுதித்துறை ஆடைதொழிற்சாலைகள் பாதுகாப்பு சேவை தாதியர் சேவைமற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள்போன்ற விடயங்களை உள்ளடக்கி சுமார் 40ற்கும் மேற்பட்ட தொழிற்துறை நிறுவனங்களும் பயிற்சி நெறி நிறுவனங்களும் பங்கேற்றவுள்ளனர்.

தொழிற்பயிற்சி பாடநெறிக்கான கணனித்துறை தாதிய பயிற்சிநெறி ஏனைய தொழில்பயிற்சி நிறுவனங்கள் கப்பல்துறை தொழில்வாய்ப்பு மற்றும் அதற்கான தொழிற்பயிற்சி மற்றும் ஹோட்டல் முகாமைத்துவத்தில் போன்ற பயிற்சிநெறிகள் தொடர்பான நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளன.

தொழில் தேடுபவர்களையும் தொழில் வழங்குநர்களையும் இணைக்கும் மாபெரும் தொழிற்சந்தையாக நடாத்தப்படவுள்ளது.தொழில் தேடுபவர்களையும் தொழில் வழங்குநர்களும் தங்களுடைய தேவைகளை இந்த மாபெரும் தொழிற்சந்தை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இந்த மாபெரும் தொழிற்சந்தை தொழில் தேடும் இளைஞர் யுவதிகளுக்கும் தொழில் தகைமை மேலும் மேம்படுத்த ஆர்வம் உடையவர்களுக்கும் பெரிய வாய்ப்பாக அமையும் என்றார்.